சிதம்பரம் அருகே படகுகளுக்கு தீ வைத்த வழக்கு - 9 பேர் கைது

சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டையில் படகுகள் தீ வைத்து எரிக்கப்பட்ட வழக்கில் 9 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-07-30 06:21 GMT
கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அருகே அன்னங்கோயில் மீன்பிடி துறைமுகத்தில் சுருக்கு வலையை பயன்படுத்தி மீன்பிடிப்பதில் மீனவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 4 படகுகளுக்கு, சிலர் தீ வைத்தனர். இதனால் அன்னங்கோவில் துறைமுகத்தில் பதற்றம் நிலவியது. இந்நிலையில், மறு உத்தரவு வரும் வரை மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.இதையடுத்து பரங்கிப்பேட்டை, அன்னங்கோவில், எம்ஜிஆர் திட்டு, முழுகுதுறை, புதுப்பேட்டை, சின்னூர், புதுக்குப்பம் என 50க்கும் மேற்பட்ட கிராம மீனவர்கள், கடலுக்கு செல்லவில்லை. இதனால், ஆயிரத்துக்கும் மேற்பட்ட படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் இருக்க, அப்பகுதியில் சுமார் 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே படகுகள் தீ வைத்து எரிக்கப்பட்ட வழக்கில் சி.புதுப்பேட்டையை சேர்ந்த 9 பேரை போலீசார் கைது செய்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்