நடிகரும் இயக்குநருமான அனுராக் காஷ்யப் மீது பாலியல் புகார் - Me too இயக்கத்தில் பரபரப்பை கிளப்பிய நடிகை பாயல் கோஷ்

பாலிவுட்டில் பிரபல இயக்குநரும், நடிகருமான அனுராக் காஷ்யப் மீது நடிகை பாயல் கோஷ், மீ டூ இயக்கத்தின் கீழ் பாலியல் புகார் தெரிவித்திருப்பது திரை உலகில் பரபரப்பை பற்ற வைத்திருக்கிறது...

Update: 2020-09-20 11:48 GMT
இந்தி பட உலகில் அதிரடியான தன் படங்களால் ரசிகர்கள் கவனத்தை ஈர்த்தவர் இயக்குநர் அனுராக் காஷ்யப்.  இவரின் படங்கள் வெளியாகும்  போது பரபரப்பும் சேர்ந்தே வரும். காரணம் நடந்த சம்பவங்களை எல்லாம் படமாக்கி சர்ச்சையையும் சேர்ந்தே கொண்டு வருவார்.. இவரின் அடையாளமாக கேங்ஸ் ஆஃப் வாஸிப்பூர், பிளாக் பிரைடே உள்ளிட்ட படங்களை சொல்லலாம். தமிழில் வெளியான இமைக்கா நொடிகள் படத்திலும் வில்லனாக நடித்து ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றார் அனுராக். அவ்வப்போது ட்விட்டரில் கருத்துகளை வெளியிட்டு சர்ச்சைகளை சந்திக்கும் இவர், இப்போது சிக்கியிருப்பது மீ டூ புகாரில்... இவர் மீது பாலிவுட் நடிகை பாயல் கோஷ் பரபரப்பான புகாரை அளித்திருக்கிறார்... 

இந்தி, தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிப்படங்களில் நடித்திருக்கும் பாயல் கோஷ், அனுராக் காஷ்யப் தன்னிடம் அத்துமீறியதாக இப்போது மவுனம் கலைத்திருக்கிறார். மீ டூ இயக்கம் தீவிரமாக இருந்த போதே தான் அதைப் பற்றி பேச நினைத்ததாகவும், ஆனால் பட வாய்ப்புகள் கிடைக்காமல் போகும் என்பதால் எதுவும் பேசவில்லை என கூறியிருக்கிறார். பட வாய்ப்பு தருவதாக கூறி தன்னை வரவழைத்து கட்டாயப்படுத்தி அத்துமீற அனுராக் முயன்றார் என கூறியிருக்கும் பாயல், அவரிடம் கெஞ்சி தப்பி வந்து விட்டேன் என கூறியிருப்பது பாலிவுட்டையே அதிர்ச்சிக்குள்ளாகி இருக்கிறது... 

அப்போது நடந்த சம்பவத்திற்கு தன்னிடம் ஆதாரம் எதுவும் இல்லை என கூறியிருக்கும் அவர், யாரேனும் உங்களை வேலைக்காக அணுகினால் அவர் எதற்கும் தயார் என்று அர்த்தமில்லை என்றும் காட்டமாகவே கூறியிருக்கிறார். ஆனால் இதுபோன்ற ஒரு சம்பவமே நடக்கவில்லை என்றும், பாயலின் புகார்கள் ஆதாரமற்றவை என அனுராக் காஷ்யப் விளக்கம் அளித்திருக்கிறார். இந்த விவகாரம் வெளியானதில் இருந்து தனக்கு ஏகப்பட்ட செல்போன் அழைப்புகள் வருகின்றன என்றும், வீசப்பட்ட அம்புகள் விரைவில் வீழ்ந்து விடும் என்றும் விளக்கம் அளித்திருக்கிறார் அனுராக். 

அதேநேரம் நடிகை பாயலுக்கு ஆதரவாக களத்தில் இறங்கியிருக்கிறார் கங்கனா ரணாவத். ஏற்கனவே அனுராக் காஷ்யப்புக்கும் கங்கனாவுக்கு ட்விட்டரில் வார்த்தை போர் நடந்து வந்த நிலையில் பாயலுக்கு ஆதரவாக இறங்கி அனுராக்கை வறுத்தெடுத்துக் கொண்டிருக்கிறார் கங்கனா. கிட்டத்தட்ட 3 வருடங்களாக மீ டூ இயக்கத்தில் பலரும் சிக்கிய நிலையில் இப்போது அனுராக் காஷ்யப் மீது புகார்களை அள்ளி வீசியிருக்கும் பாயல் கோஷ், அவர் மீது நடவடிக்கை எடுங்கள், தனக்கு உதவுங்கள் என பிரதமரிடம் கோரிக்கை விடுத்திருப்பது பல கேள்விகளையும் எழுப்பியிருக்கிறது. 

Tags:    

மேலும் செய்திகள்