தமிழைக் கட்டாயப் பாட மொழியாகவும், பயிற்று மொழியாகவும் உயர்த்துவதற்கு கடந்த 3 ஆண்டுகளில் பயனுள்ள திட்டம் எதுவும் செயல்படுத்தப்படவில்லை என்று, பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 25 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ள தமிழ் பயிற்று மொழி சட்டம் போன்ற ஆக்கப்பூர்வமான திட்டங்களைச் செயல்படுத்தாமல், பெயரளவிலான திட்டங்களை மட்டும் செயல்படுத்துவதால் எந்த பயனும் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார். தமிழ்க் கட்டாயப் பாடச் சட்டத்துக்கு எதிரான வழக்கை விசாரணைக்கு கொண்டுவர அரசு நடவடிக்கை எடுக்காததால் வரும் கல்வியாண்டிலும் அந்த சட்டத்தை நிறைவேற்ற வாய்ப்பில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழை பயிற்று மொழியாக்குவது, தமிழ்க் கட்டாயப்பாட மொழியாக்குவது, கடைகளின் பெயர்ப்பலகைகளில் தமிழை உறுதிப்படுத்துவது, ஆகியவைதான் தமிழ் வளர்ச்சிக்காக மேற்கொள்ளப்பட வேண்டிய முதன்மை நடவடிக்கைகள் என்றும் அவர் கூறியுள்ளார். தமிழ் வளர்ச்சியில் சாதனை படைத்து விட்டதாக விளம்பரம் செய்வதைத் தவிர்த்து, ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார்.