அமெரிக்க துணை அதிபர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ் போட்டி
அமெரிக்க துணை அதிபர் பதவிக்கு ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த எம்.பி.யான கமலா ஹாரிஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பரில் நடைபெற உள்ளது. அதில் ஜனநாயகக் கட்சி சார்பில் அதிபர் பதவிக்கு முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன் போட்டியிடுகிறார். இந்நிலையில் துணை அதிபர் பதவிக்கு தங்கள் கட்சி சார்பில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த எம்.பி.யான கமலா ஹாரிஸ் போட்டியிட போவதாக ஜோ பிடன் அறிவித்துள்ளார். இதன் மூலம் இந்த பதவிக்கு போட்டியிடும் முதல் ஆசிய- அமெரிக்கர் மற்றும் இந்தியா வம்சாவளியை சேர்ந்தவர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். 55 வயதான கமலா ஹாரிஸ் அரசு தலைமை வழக்கறிஞராகவும் பணியாற்றி உள்ளார். தற்போது கலிஃபோர்னியா மாகாண எம்.பி.யாக உள்ள கமலா ஹாரிஸ் ஒரு அச்சமற்ற போராளி என்றும் நாட்டின் தலைசிறந்த அதிகாரிகளில் ஒருவர் எனவும் ஜோ பிடன் தெரிவித்துள்ளார். அமெரிக்க துணை அதிபர் பதவிக்கு போட்டியிட தேர்வாகியிருப்பதை பெருமையாக உணர்வதாக கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார். இதனிடையே விவாதங்களின் போது ஜோ பிடனை கமலா ஹாரிஸ் அவமதித்திருப்பதாக விமர்சித்துள்ள அதிபர் டிரம்ப் அவரை துணை அதிபர் வேட்பாளராக ஜோ பிடன் தேர்வு செய்திருப்பது வியப்பளிப்பதாக கூறியுள்ளார்.