வறுமை ஒழிப்பு - உயர்நீதிமன்ற நீதிபதிகள் வேதனை

சுதந்திரமடைந்து 70 ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் வறுமை ஒழிக்கப்படவில்லை என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

Update: 2021-07-14 11:06 GMT
சாலை, நடைபாதை, அரசு அலுவலகங்கள் கட்டுமான பணிகளின் தரத்தை பரிசோதிக்கக்கோரி, சென்னையைச் சேர்ந்த ஸ்ரீகிருஷ்ணா பகவத் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கு, தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அரசு அமைக்கும் சாலைகள் ஆறு மாதங்கள் கூட நீடிப்பதில்லை எனவும், இதை அதிகாரிகள் ஆய்வு செய்வதில்லை எனவும் மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் குற்றச்சாட்டினார். மனுவுக்கு நான்கு வாரங்களில் பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், சாலைகள், கட்டிடங்கள் கட்டுவது தொடர்பாக உள்ள விதிகளை அமல்படுத்தவும் அறிவுறுத்தினர். சாலைகள் அமைப்பது தொடர்பாக உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கவோ, ஆய்வு செய்யவோ முடியாது எனக் குறிப்பிட்ட நீதிபதிகள், குடிமக்கள் விழிப்புணர்வுடன் அதிகாரிகளையும், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளையும் பொறுப்பாக்க வேண்டும் எனவும் தெரிவித்தனர். சுதந்திரமடைந்து 70 ஆண்டுகளுக்கு மேலாகியும் அடிப்படை கல்வி முழுமையாக வழங்கப்படவில்லை என்று வேதனை தெரிவித்த நீதிபதிகள், இன்னும் நாட்டின் பொருளாதாரம் 'டேக் ஆப்' நிலையிலேயே இருப்பதாகவும், எப்போது 'டேக் ஆப்' ஆகும் என்று தெரியவில்லை எனவும் தெரிவித்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்