குடிபோதையில் தாயை திட்டியதால் விபரீதம் - நண்பனின் கண்களை தோண்டி எடுத்த கொடூரம்
சென்னையில் நண்பனின் கண்களை தோண்டி எடுத்த இளைஞரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்தின் பின்னணியில் நடந்தது என்ன? இப்போது பார்க்கலாம்...
தென்காசி மாவட்டம் கீழ்கல்லத்திகுளம் கிராமத்தை சேர்ந்தவர் அசோக் சக்கரவர்த்தி. 29 வயதான இவர் திருவான்மியூரில் உள்ள டீக்கடையில் டீ மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். அதே ஊரை சேர்ந்தவர் பெரியபாண்டியன். இவரும் தேனாம்பேட்டையில் உள்ள டீக்கடையில் வேலை பார்த்து வருகிறார். ஒரே ஊர்க்காரரான இவர்கள் 2 பேருமே நண்பர்களாக இருந்து வந்ததால் அடிக்கடி ஒன்றாக சந்தித்து மரு அருந்துவது வழக்கம். கடந்த சில மாதங்களுக்கு முன்பாக இருவரும் மது அருந்திய போதே வாய்த்தகராறு ஏற்பட்டு கைகலப்பானதாக கூறப்படுகிறது. இதனால் முன்விரோதமும் இருந்துள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில் இருவரும் மீண்டும் மெரினா கடற்கரையில் அமர்ந்து மது அருந்தியுள்ளனர். அப்போது ஏற்கனவே உள்ள பிரச்சினை பற்றி பேச்சுவரவே, மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது பெரிய பாண்டியனின் தாய் குறித்து அசோக் சக்கரவர்த்தி அவதூறாக பேசியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த பெரியபாண்டியன், அங்கிருந்த மதுபாட்டிலை எடுத்து உடைத்து அசோக்கின் மார்பை குத்தி கிழித்துள்ளார். மேலும் மதுபாட்டிலை எடுத்து அசோக்கின் கண்களை குத்தியதோடு, குச்சியை எடுத்து அவரின் கண்களை தோண்டி எடுத்துள்ளார். கொடூரமான இந்த செயலை செய்த பெரியபாண்டியன் எதற்கும் அஞ்சாமல் அவரே காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்துள்ளார். அவர் சொன்னதை கேட்டு அதிர்ந்து போன போலீசார் உடனே சம்பவ இடத்திற்கு சென்று அசோக் சக்கரவர்த்தியை மீட்டனர். ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட அவர் ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவத்தை தொடர்ந்து பெரியபாண்டியனை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குடிபோதையில் நடந்த இந்த கொடூர சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது....