கடன் கொடுப்பதை வங்கிகள் எளிமையாக்க வேண்டும் - அமைச்சர் எம். ஆர். விஜயபாஸ்கர்
படித்த இளைஞர்கள் தொழில் தொடங்குவதற்கு ஏற்ப, கடன் கொடுப்பதை வங்கிகள் எளிமையாக்க வேண்டும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கேட்டுக் கொண்டார்.
கரூரில், சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோருக்கான கருத்தரங்கத்தில் கலந்து கொண்ட அவர், தமிழக தொழில் நிறுவனங்களுக்கு தங்கு தடையில்லாமல் மின்சாரம் அளிப்பதற்காக இமாச்சல பிரதேசத்தில் இருந்து 4 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் வாங்கப்படுவதாக கூறினார். நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் பெஞ்சமின், சிறு தொழில் நிறுவனங்களுக்கு 22 கோடியே 56 லட்சம் ரூபாய் நிலுவைத் தொகை வழங்கியதற்காக தமிழக அரசுக்கு, மத்திய அரசு விருது வழங்கி உள்ளதாகவும் கூறினார். தொழில் நிறுவனங்களுக்கு ஒற்றைச் சாளர முறையில், விரைவாக அனுமதி வழங்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் பெஞ்சமின் குறிப்பிட்டார்.