சட்டவிரோதமாக நிலத்தடி நீர் எடுப்பது தொடர்பான வழக்கு - புகார்களின் மீதான நடவடிக்கை : சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி
தமிழகத்தில் சட்ட விரோதமாக நிலத்தடி நீர் எடுப்பவர்கள் மட்டுமல்லாமல் அவர்களுக்கு உடந்தையாக செயல்படும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சட்டவிரோதமாக நிலத்தடி நீர் எடுக்கப்படுவதாக திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த சிவசங்கர் என்பவர் தாக்கல் செய்திருந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், சட்ட விரோதமாக நிலத்தடி நீர் எடுக்கப்படுவது தொடர்பாக எத்தனை புகார்கள் வந்துள்ளன என்று கேள்வி எழுப்பினர். தொடர்ந்து அந்த புகார்களின் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது தொடர்பாக இரண்டு வாரத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்யவும் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலருக்கு உத்தரவிட்டுள்ளனர். இது சம்பந்தமாக பறிமுதல் செய்யப்படும் வாகனங்களிடம் இருந்து அபராதம் வசூலிப்பதோடு, அவற்றை முடக்கம் செய்ய வேண்டும் என்றும் கூறி, வழக்கு விசாரணையை ஆகஸ்ட் இரண்டாம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.