டி.டி.ஆர். போல நடித்து பயணிகளிடம் பணம் பறிப்பு
சேலம் அருகே டிக்கெட் பரிசோதகர் போல நடித்து, ரயில் பயணிகளிடம் பணம் பறித்த நபர் பயணிகளை கடுமையாக தாக்கிய வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.
கடந்த வாரம் கிருஷ்ணகிரி மாவட்டம் சாமல்பட்டி ரயில் நிலையத்தில், டிக்கெட் பரிசோதகர் ஒருவரது நடவடிக்கைகளில் சந்தேகம் அடைந்த ரயில்வே ஊழியர்கள், அவரை பிடித்து ரயில்வே போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். விசாரணையில் அல்ஜிகானி என்ற அந்த இளைஞர் போலியான அடையாள அட்டைகள் மூலம் டிக்கெட் பரிசோதகராக நடித்து ரயில்பயணிகளிடம் பணம் பறித்து வந்தது தெரிய வந்துள்ளது. பெங்களூருவிற்கு சென்றபோது, டிக்கெட் பரிசோதகர் ஒருவர் அல்ஜிகானிக்கு அபாரதம் விதித்ததாகவும், அதே போல பணம் பறிக்க நினைத்து இவ்வாறு டிடிஆர் போல நடித்ததாகவும் அவர் ஒப்புக்கொண்டார். அவரிடம் இருந்து போலியான அடையாள அட்டைகள், அபராதம் விதிக்க தேவையான புத்தகங்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன. இது ஒருபுறம் இருக்க, அல்ஜிகானி, டிக்கெட் பரிசோதகராக நடித்து பல ரயில் பயணிகளை கடுமையாக தாக்கிய வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளன. இந்த வீடியோ ரயில் பயணிகளிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.