இலங்கை அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் மரணம் - உடல் நலக்குறைவால் உயிரிழப்பு
இலங்கை அமைச்சரும், தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான ஆறுமுகன் தொண்டமான் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.
இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள அவரது இல்லத்தில் இருந்த ஆறுமுகன் தொண்டமான் திடீரென மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து ஆறுமுகன் தொண்டமான், தலங்கம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் அவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெருந்தோட்டத்துறை அமைச்சராக பதவி வகித்து வந்த அவருக்கு வயது 55. 1964ஆம் ஆண்டு, மே 29 ஆம் தேதி பிறந்த ஆறுமுகன் தொண்டமான், 1994ஆம் ஆண்டு நுவரெலிய மாவட்டத்தில் இருந்து முதன் முதலாக நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். 1999ஆம் ஆண்டு, மறைந்த சௌமியமூர்த்தி தொண்டமானுக்கு பின்னர் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவராக ஆறுமுக் தொண்டமான் தேர்வு செய்யப்பட்டார். இலங்கை அரசில் பல்வேறு அமைச்சரவை பொறுப்புகளை வகித்த ஆறுமுகன் தொண்டமான், இறுதியாக தோட்டத்துறை அமைச்சராக பதவி வகித்து வந்தார்.