"பரம்பரை வரி விதிக்க திட்டம்" - காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்த பிரதமர் மோடி

Update: 2024-04-24 14:52 GMT

சமூக நீதியை காங்கிரஸ் கட்சி கொலை செய்து, அம்பேக்தரை அவமதித்து விட்டதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டினார்.

மக்களவைத் தேர்தலையொட்டி, மத்திய பிரதேச மாநிலம் சாகரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அவர், பரம்பரை வழியாக பெற்ற சொத்துக்களின் மீது பரம்பரை வரி விதிக்க காங்கிரஸ் திட்டமிட்டிருப்பதால், அந்த சொத்துகளை ஆட்சிக்கு வந்ததும் காங்கிரஸ் கட்சி கொள்ளையடித்து விடும் என்று கூறினார். ஆந்திராவில் கடந்த 2004- ஆம் ஆண்டு மதத்தின் அடிப்படையில் இட ஒதுக்கீடை வழங்கி, அம்பேத்கர் மற்றும் அரசியல் சாசனத்தின் முதுகில் குத்திய காங்கிரஸ் கட்சி, கர்நாடகாவிலும் அதே அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கியிருப்பதாக குற்றம் சாட்டினார். இதற்காக, இஸ்லாமிய ஜாதிகளை, ஓபிசி பிரிவில் பட்டியலிட்டு, ஓபிசி பிரிவினரின் பிரதான உரிமைகளை காங்கிரஸ் பறித்து விட்டதாகவும் அவர் குற்றம்சாட்டினார். சமூக நீதியை காங்கிரஸ் கட்சி கொலை செய்ததுடன், அரசியல் சாசனத்தின் உணர்வை புண்படுத்தி, அம்பேத்கரை அவமதித்து விட்டதாகவும் அவர் விமர்சித்தார். ஓபிசி பிரிவினர், பட்டியல் இனத்தவர், பழங்குடி இனத்தவரின் இடஒதுக்கீட்டை பாதுகாக்க பாஜக 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறுவது அவசியம் என்றும் குறிப்பிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்