ஜூன்1 முதல் இயக்கப்படும் 200 ரயில்களின் பட்டியல் வெளியீடு

நாடு முழுவதும் வரும் ஜூன்1-ந்தேதி முதல் இயக்கப்பட உள்ள 200 ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு IRCTC இணைய தளத்தில் இன்று காலை 10 மணிக்கு தொடங்கும் என ரயில்வேத்துறை அறிவித்துள்ளது.

Update: 2020-05-21 02:54 GMT
ஊரடங்கு காரணமாக நாடு முழுவதும் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், வரும் ஜூன் 1-ஆம் தேதி முதல் நாள்தோறும், 200 பயணிகள் ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் அறிவித்தார். இதனிடையே, ஏ.சி. வசதி இல்லாத 2-ஆம் வகுப்பு பெட்டிகளை மட்டுமே கொண்ட 200 ரயில்களுக்கான பட்டியலை ரயில்வேத்துறை வெளியிட்டுள்ளது. 200 ரயில்களுக்கான முன்பதிவு IRCTC இணைய தளத்தில் இன்று காலை 10 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் அடுத்த 30 நாட்களுக்கு டிக்கெட் முன்பதிவு செய்யலாம் என்றும் ரயில் நிலையங்களில் டிக்கெட் வாங்கவோ, முன்பதிவோ செய்ய இயலாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

அறிவிக்கப்பட்டுள்ள 200 ரயில்களில் முன்பதிவு அல்லாத பெட்டிகள் இல்லை என்றும், இரண்டாம் வகுப்பு கட்டணம் தான் அனைத்து பயணிகளிடமும் வசூலிக்கபடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்பதிவு செய்யும் போது தட்கல், பிரீமியம் தட்கல் போன்றவை கிடையாது என்றும் சில வகை நோயாளிகளுக்கு மட்டுமே சலுகை உண்டு எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிக்கெட் முன்பதிவு செய்த அனைத்து பயணிகளும் தீவிர பரிசோதனைக்கு பிறகே ரயில் நிலையத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும், ரயில்களில் பயணிகளுக்கு துணி, போர்வை, திரை போன்றவை வழங்கப்பட மாட்டாது என்றும்  தெரிவிக்கப் பட்டுள்ளது. இதனிடையே, 200 ரயில்கள் பட்டியலில், தமிழகத்திற்கு எந்த ரயிலும் அறிவிக்கப்படவில்லை.
Tags:    

மேலும் செய்திகள்