பெண் VAO-வை தாக்கிய சம்பவம்... திமுக மாவட்ட கவுன்சிலர் கைது

Update: 2024-04-26 09:43 GMT

விழுப்புரம் அருகே, பெண் கிராம நிர்வாக அலுவலரை தாக்கிய திமுக மாவட்ட கவுன்சிலரை போலீசார் கைது செய்தனர்.

திருக்கோவிலூர் அருகே உள்ள ஆயந்தூர் கிராமத்தை சேர்ந்த திமுக மாவட்ட கவுன்சிலர் ராஜீவ் காந்தி என்பவர், கிராம நிர்வாக அலுவலர் சாந்தி என்பவருக்கும் இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே, கடந்த 19 ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தலையொட்டி ஆயந்தூர் பகுதி வாக்குச்சாவடி மையத்தில், கிராம நிர்வாக அலுவலர் சாந்தி, தேர்தல் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். தேர்தல் முடிந்த பிறகு வாக்குச்சாவடி மையத்தில் பணிபுரிந்த ஊழியர்களுக்கு, அவர் உணவகத்தில் இருந்து உணவினை வாங்கிக் கொண்டு வந்துள்ளார். அதே கடையில் ராஜீவ் காந்தியும் உணவு வாங்கியுள்ளார். அப்போது ராஜீவ் காந்திக்கு பார்சல் செய்த உணவை விஏஓ சாந்தி எடுத்துக்கொண்டு வந்ததாக கூறப்படுகிறது. பின்னர் வாக்குச்சாவடி மையத்திற்கு சென்று அங்கிருந்த விஏஓ சாந்தியை ராஜீவ்காந்தி தாக்கியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக சாந்தி கொடுத்த புகாரின் பேரில், திமுக மாவட்ட கவுன்சிலர் ராஜீவ்காந்தி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்