சினிமா பாணியில் பள்ளி மாணவன் கடத்தல் - பட்டப்பகலில் மாணவனை கடத்தி சென்ற கும்பல்

சென்னையில் பட்டப்பகலில் கடத்தப்பட்ட பள்ளி மாணவனை போலீசார் பத்திரமாக மீட்டுள்ளனர். அக்காவுக்காக தம்பி கடத்தப்பட்டது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Update: 2021-02-18 09:22 GMT
மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் பள்ளி மாணவரை கும்பல் ஒன்று துணிச்சலாக கடத்தும் காட்சிகள் தான் இது. படப்பகலில் சினிமா பாணியில் நிகழ்ந்த இந்த கடத்தலுக்கு பின்னால் ஒரு காதல் கதை உள்ளது. சென்னை அருகே உள்ள செங்குன்றம் புதுநகர் பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன். காய்கறி வியாபாரியான இவருக்கு ஜமுனா என்ற பெண்ணும், 12-ம் வகுப்பு படிக்கும் கணேஷ் என்ற மகனும் உள்ளனர். கணேஷின் அக்கா ஜமுனாவும் அவர்களது அத்தை மகனான புதுக்கோட்டையை சேர்ந்த பூபதியும் காதலித்து வந்ததாக தெரிகிறது. இருவரும் கடந்த 4 மாதங்களுக்கு முன் வீட்டிற்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டனர். பூபதியும், ஜமுனாவும் புதுக்கோட்டையில் தங்கி குடும்பம் நடந்தி வந்ததை அறிந்த மாரியப்பன், ஜமுனாவை  பூபதிக்கு தெரியாமல் சென்னைக்கு அழைத்து வந்துள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த பூபதி, மாரியப்பனை மிரட்டுவதற்காக தனது நண்பர்கள் 5 பேருடன் சென்னைக்கு வந்து ஜமுனாவின் தம்பியான பள்ளி மாணவன் கணேஷை கடத்தியுள்ளார். கடத்திவிட்டு செல்லும்போது காரில் இடம் இல்லாததால் உடன் வந்த சந்தோஷ் குமாரை அங்கேயே இறக்கிவிட்டு சென்றுள்ளனர். இதைபார்த்த மக்கள் சந்தோஷ் குமாரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். 

சந்தோஷ் குமாரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர்கள் அனைவரும் மாணவனை கடத்திக்கொண்டு புதுக்கோட்டைக்கு செல்வது தெரியவந்தது. இதையடுத்து தேசிய நெடுஞ்சாலையில் உள்ள காவல் நிலையங்களுக்கு தகவல் அளிக்கப்பட்டு போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். இதையடுத்து, செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுப்பாக்கத்தில் உள்ள  சுங்கச்சாவடியில் வைத்து பூபதி மற்றும் கடத்தல்கும்பலை கைது செய்த போலீசார் ,மாணவர் கணேஷை பத்திரமாக மீட்டனர். குடும்ப பிரச்னையால் நடந்த இந்த கடத்தல் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்