குடியுரிமை சட்ட திருத்தம் - திமுக போராட்டம்
குடியுரிமை திருத்த மசோதாவை கண்டித்து, தமிழகத்தில் பல்வேறு இடங்களிலும் திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சேலம்
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, சட்ட நகலை கிழித்து எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட இருநூற்றுக்கும் மேற்பட்ட திமுக இளைஞரணியினரை காவல்துறையினர் கைது செய்தனர்.
தூத்துக்குடி
இதேபோல், தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் முன்பாக, குடியுரிமை சட்ட நகலை கிழித்தெறிந்து திமுக இளைஞர் அணியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
கோவை
கோவையில் சிவானந்தா காலனி பகுதியில், குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன முழக்கங்களையும், கோஷங்களையும் எழுப்பினர். அதனை தொடர்ந்து குடியுரிமை சட்ட நகலை கிழித்து எறிந்தனர்.
தஞ்சாவூர்
தஞ்சாவூரில் திமுக இளைஞரணியினர் குடியுரிமை சட்ட நகலை கிழித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.