பள்ளிக்கு சென்ற அக்கா, தம்பி கடத்தல் - இருசக்கர வாகனத்தில் கடத்திய இளைஞன் கைது

பள்ளிக்கு சென்ற அக்கா தம்பி இருவரையும் இருசக்கர வாகனத்தில் வைத்து கடத்தி சென்ற இளைஞனை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

Update: 2019-08-23 02:07 GMT
திருவள்ளூர் மாவட்டம் அனுப்பம்பட்டு அடுத்த ஏரிமேடு கிராமத்தை சேர்ந்தவர் வீரன். கூலித் தொழிலாளியான இவரது மகள் தனுஸ்ரீ, மகன் அருண் ஆகியோர் அங்குள்ள பள்ளியில் படித்து வருகின்றனர். இந்நிலையில், வழக்கம்போல, பள்ளிக்கு சென்ற அவர்கள் இருவரையும், அந்த வழியே வந்த இளைஞர் ஒருவர் பள்ளியில் இறக்கி விடுவதாக கூறி அவர்களுக்கு லிப்ட் கொடுத்துள்ளார். இந்நிலையில் அக்கா, தம்பி இருவரும் பள்ளியை கடந்து இருசக்கர வாகனத்தில் செல்வதை கண்ட பிற மாணவர்கள், ஆசிரியரிடம் கொடுத்த தகவலின் பேரில் அவர்கள் கடத்தப்பட்டது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து போலீசாரும், பொது மக்களும் அந்த இளைஞனை வலை வீசி தேடி வந்தனர். இந்நிலையில் 3 மணி நேரம் குழந்தைகளை இருசக்கர வாகனத்தில் வைத்து சுற்றித்திரிந்த அந்த இளைஞனை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Tags:    

மேலும் செய்திகள்