தங்கையின் கணவரை வெட்டி கொன்ற அண்ணன்கள் - சாலையில் உயிருக்குப் போராடிய இளைஞர்
சென்னை வியாசர்பாடியில் தங்கையின் கணவரை வெட்டி படுகொலை செய்த இரண்டு அண்ணன்களை போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னை வியாசர்பாடி மேம்பாலம் அருகே ஜெயக்குமார் என்பவர் சென்று கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஜெயகுமாரின் மைத்துனர்கள் விஜயதாஸ் மற்றும் மோகன்தாஸ் ஆகிய இருவரும் ஜெயக்குமாரை சரமாரியாக அரிவாளால் வெட்டினர்.படுகாயமடைந்த ஜெயகுமார் சாலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அந்த வழியாக சென்றவர்களில் ஒருவர்கூட ஜெயகுமாரை காப்பாற்ற முன் வரவில்லை. இந்த நெஞ்சை பதறவைக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது.அதன் பிறகு உயிருக்கு ஆபத்தான நிலையில் ஜெயகுமாரை போலீசார் மீட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இந்த படுகொலை தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், கொலையாளிகளை தேடி வருகின்றனர்.
16 வயது சிறுவன் சரமாரியாக வெட்டி படுகொலை :
செங்கல்பட்டு அருகே 16 வயது சிறுவன் சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு அருகே, சூர்யா என்ற 16 வயது சிறுவன், குடும்ப சூழ்நிலை காரணமாக படிப்பை நிறுத்திவிட்டு, இதே பகுதியில் கடந்த ஒரு வருடகாலமாக ஜேசிபி இயந்திரத்தில் உதவியாளராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் நேற்று இரவு முழுவதும், அவர் வீடு திரும்பாத நிலையில், இன்று காலை சூர்யா வெட்டு காயங்களுடன் இறந்து கிடந்துள்ளார். பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார், அதே பகுதியை சேர்ந்த 3 இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.