கட்சி நிர்வாகிகளுடன் சாலை மறியல் : திமுக எம் எல் ஏ மீது வழக்குப் பதிவு
காவல் துறையினரை அவதூறாக பேசியதாக காஞ்சிபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், பிரசாரம் செய்ய வந்தபோது, அங்கு ஏராளமான அதிமுகவினர் திரண்டனர். அந்த நேரத்தில் திமுக வேட்பாளரை ஆதரித்து நடிகர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் மேற்கொள்ள வருவதாக இருந்தது. அதனால் தேரடி பகுதியில் திமுகவினரும் திரண்டதால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. திமுகவினருக்கு தேர்தல் பிரசாரம் நடத்த அனுமதி வழங்கிய இடத்திலும் அதிமுகவினர் குவிந்தனர். இதனையடுத்து அங்கு வந்த காஞ்சிபுரம் தொகுதி திமுக எம்எல்ஏ எழிலரசன், போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் நிர்வாகிகளுடன் சேர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டார். இதனால், விஷ்ணுகாஞ்சிபுரம் போலீசார் 3 பிரிவுகளின் கீழ் திமுக எம்எல்ஏ எழிலரசன் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.