காதலை முறித்துக் கொண்டதால் ஆத்திரம் - இளம்பெண்ணை குத்திக் கொன்ற பயங்கரம்

டெல்லியில் காதலை முறித்துக் கொண்டதால் இளம்பெண்ணை கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது...

Update: 2021-10-20 21:25 GMT
மேற்கு டெல்லியின் உத்தம்நகர் அருகே உள்ள மதியலா சாலையில் அரங்கேறி இருக்கிறது இந்த சம்பவம்... 22 வயதான டோலி பாபர் என்ற பெண் தனது நண்பரின் பிறந்த நாள் நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு இரவு 11 மணியளவில் திரும்பி கொண்டிருந்தார். ஓம் விஹார் பகுதியில் திடீரென அவரை சுற்றி வளைத்த கும்பல் டோலி பாபரை சரமாரியாக குத்தியது. இந்த அதிர்ச்சி சம்பவத்தை நேரில் பார்த்த உணவு டெலிவரி செய்யும் நபர், உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். 

போலீசார் வருவதற்கு முன்பாகவே டோலி பாபர் ரத்த வெள்ளத்தில் சரிந்து கிடந்தார்... அவரின் அருகே கத்தியுடன் நின்று கொண்டிருந்த நபரையும் போலீசார் பிடித்தனர். அப்போது அவரிடம் நடத்திய விசாரணையில் காதலை முறித்துக் கொண்ட ஆத்திரத்தில் இந்த கொடூர கொலை நடந்திருப்பது  தெரியவந்துள்ளது. 

நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்கும் பணியை செய்து வந்த டோலி பாபர், அங்கித் காபா என்பவருடன் பழகி வந்துள்ளார். இருவரும் காதலித்து வந்த நிலையில், திடீரென அங்கித்துடன் பழகுவதை டோலி நிறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த அவர், பலமுறை டோலியை மிரட்டி இருக்கிறார். இதுகுறித்து டோலி தன் குடும்பத்தினரிடம் கூறியிருக்கிறார். 

இந்த நிலையில் தான் தன் நண்பர்களை வைத்து திட்டம் தீட்டி டோலியை வரவைத்திருக்கிறார் அங்கித். அப்போது பிறந்தநாள் பார்ட்டி முடிந்த பிறகு தன் நண்பர்களுடன் வந்த டோலியை தான் வைத்திருந்த கத்தியால் கொடூரமாக குத்தியிருக்கிறார் அங்கித். இதற்கு அங்கித் நண்பர்கள் சிலரும் உடந்தையாக இருந்திருக்கிறார்கள். 

டோலியின் உடலெங்கும் கத்திக்குத்து விழுந்ததில் அவர் உயிரிழந்ததும் தெரியவந்தது. அப்போது தன் தோழியை காப்பாற்ற முயன்ற இளைஞர் ஒருவரும் தாக்குதலுக்கு ஆளானார். டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய அனைவரையும் உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்