எம்.டெக் மேற்படிப்பு - நீதிமன்றம் ஆலோசனை

அண்ணா பல்கலை கழகத்தில் எம்.டெக் படிப்புகளில் இந்த ஆண்டு மாநில அரசின் இட ஒதுக்கீட்டிலும், அடுத்த ஆண்டு மத்திய அரசின் இட ஒதுக்கீட்டிலும் மாணவர் சேர்க்கை நடத்தலாம் என உயர்நீதிமன்றம் யோசனை கூறியுள்ளது.

Update: 2021-02-16 13:05 GMT
அண்ணா பல்கலை கழகத்தில் எம்.டெக் படிப்புகளில் இந்த ஆண்டு மாநில அரசின் இட ஒதுக்கீட்டிலும், அடுத்த ஆண்டு மத்திய அரசின் இட ஒதுக்கீட்டிலும் மாணவர் சேர்க்கை நடத்தலாம் என உயர்நீதிமன்றம் யோசனை கூறியுள்ளது. 

அண்ணா பல்கலைக்கழகத்தில்,
எம்.டெக்., பயோடெக்னாலஜி, எம்.டெக்., கம்ப்யூட்டேஷனல் டெக்னாலஜி ஆகிய இரு பட்ட மேற்படிப்புகளுக்கும் இந்த ஆண்டு மாணவர்கள் சேர்க்கை இல்லை என்று  அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்திருந்த‌து. இதை எதிர்த்து இப்படிப்புக்கு நுழைவுத்தேர்வு எழுதி விண்ணப்பித்துள்ள மாணவிகள் சித்ரா மற்றும் குழலி உள்ளிட்டோர் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி புகழேந்தி இந்த ஆண்டு மாநில அரசின் இட ஒதுக்கீட்டு முறையை பின்பற்றி மாணவர் சேர்க்கை நடத்தி, அடுத்தாண்டு முதல் மத்திய அரசு இட ஒதுக்கீடு முறையை பின்பற்றலாம் என யோசனை தெரிவித்தார். 

45 மாணவர்களை சேர்ப்பதால் எந்த சிக்கலும் ஏற்படாது என்று கூறிய நீதிபதி, இந்த வழக்கு, இட ஒதுக்கீட்டு பிரச்சினைக்கு திசை மாறி செல்வதாக சுட்டிக்காட்டினார். 

இந்த ஆண்டு எம்.டெக் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை அண்ணா பல்கலை கழகமே நடத்தும் நிலையில், மத்திய அரசின் இட ஒதுக்கீடு பின்பற்றப்பட்டால் அது பல்கலை கழகத்தை இக்கட்டான நிலைக்கு தள்ளும் எனவும் நீதிபதி கூறியுள்ளார். 

உச்சநீதிமன்ற தீர்ப்பு வரும் வரை 69 சதவீத இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படாதா என கேள்வி எழுப்பிய நீதிபதி, பிப்ரவரி 18 ஆம் தேதி அனைத்து தரப்பினரும் விளக்கமளிக்க வேண்டும் என உத்தரவிட்டார். 
Tags:    

மேலும் செய்திகள்