துணைவேந்தர் சூரப்பா மீதான ஊழல் புகார் - விசாரணை தொடங்கியது
அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தர் சூரப்பா மீதான புகார்களை விசாரிக்கும் ஆணையத்துக்கு கூடுதல் உறுப்பினர்கள், அலுவலகத்தை ஒதுக்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தர் சூரப்பா மீது 280 கோடி ரூபாய் ஊழல் முறைகேடு புகார்கள் எழுந்தன. இதனைத் தொடர்ந்து அதுதொடர்பாக விசாரிக்க, ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் விசாரணை ஆணையத்தை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த ஆணையத்துக்கு உதவ, உயர் கல்வி துறை துணைச் செயலாளர் சங்கீதா, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை எஸ்.பி., பொன்னி, உயர்நீதிமன்ற, சிறப்பு அரசு வழக்கறிஞர் கார்த்திகேயன், வழக்கறிஞர் சாய் பிரசாத், ஓய்வு பெற்ற நிதித்துறை கூடுதல் செயலாளர் முத்து ஆகியோரையும் தமிழக அரசு நியமித்துள்ளது. மேலும், ஆணையத்துக்கு, தனிச் செயலாளர், தட்டச்சர், டி.எஸ்.பி. அளவிலான அதிகாரி, நீதிமன்ற அலுவலர், உதவியாளர், கிளார்க், அலுவலக உதவியாளர், துப்புரவுப் பணியாளர் என்று 8 பணியாளர்களையும் புதிதாக நியமித்து உயர்கல்வித்துறை ஆணை வெளியிட்டு உள்ளது. பசுமை வழிச் சாலையில் உள்ள பொதிகை இல்லத்தை, ஆணையத்தின் அலுவலகமாக ஒதுக்கி அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், சூரப்பா மீதான ஊழல் குற்றச்சாட்டு குறித்த விசாரணை தொடங்கி உள்ளதாகவும், நேரிலும் மின்னஞ்சல் மூலமாகவும் புகார்களை அளிக்கலாம் என ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தெரிவித்துள்ளார். மின்னஞ்சல் மின்னஞ்சல் முகவரி விரைவில் தெரிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.