தீபா தொடர்ந்த வழக்கு : சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
தலைவி திரைப்படத்துக்கும், குயின் இணைய தள தொடருக்கும் தடையில்லை என கூறி தீபா தொடர்ந்த வழக்கை, சென்னை உயர் நீதிமன்றம் முடித்து வைத்துள்ளது.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு 'தலைவி' என்ற திரைப்படம் தயாரிக்கப்பட்டு வருகிறது. ஏ.எல். விஜய் இயக்கும் இந்த படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் கங்கனா ரனாவத் நடித்து வருகிறார். இதேபோல், ஜெயலலிதா வாழ்க்கை குறித்து கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கியுள்ள 'குயின்' என்ற இணைய தள தொடரில் ரம்யா கிருஷ்ணன் நடித்துள்ளார். இவற்றுக்கு தடை கோரி ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்நிலையில், 'குயின்' இணைய தள தொடரில் தீபா கதாபாத்திரம் இடம் பெறவில்லை என்ற கௌதம் வாசுதேவ் மேனன் தரப்பு உத்தரவாதத்தை ஏற்ற உயர்நீதிமன்றம், 'தலைவி' திரைப்படத்துக்கும், 'குயின்' இணைய தள தொடருக்கும் தடையில்லை என்று கூறி வழக்கை முடித்து வைத்தது. 'தலைவி' படத்தில் முழுக்க கற்பனையானது என அறிவிப்பு வெளியிடவும் பட நிறுவனத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.