2 ஆயிரம் ரூபாய் சிறப்பு நிதி வழங்கும் திட்டத்துக்கான புள்ளிவிவரம் தவறானது - சட்டப் பஞ்சாயத்து இயக்கம் புகார்
2 ஆயிரம் ரூபாய் சிறப்பு நிதி வழங்கும் திட்டத்துக்கான புள்ளிவிவரம் தவறானது என சட்டப் பஞ்சாயத்து இயக்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் புகார் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கஜா புயல் பாதிப்பு மற்றும் வறட்சி காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார இழப்பில் இருந்து மீட்க வறுமை கோட்டுக்கு கீழுள்ள 60 லட்சம் பேருக்கு தலா 2 ஆயிரம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இதற்கு ஆயிரத்து 200 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியது. இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் மணிகுமார், சுப்பிரமணியம் பிரசாத் முன்னிலையில் ஆஜரான சட்டப் பஞ்சாயத்து இயக்க செந்தில் ஆறுமுகம், வறுமைக் கோட்டுக்கு கீழ் 60 லட்சம் பேர் உள்ளதாக கூறுவது தவறான புள்ளிவிவரம் என்றார். உண்மையான புள்ளி விவரம் மூலம் சிறப்பு நிதி வழங்க வேண்டும் என்ற அவரது முறையீட்டை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், இதுகுறித்து மனுவாக தாக்கல் செய்தால் நாளை விசாரிப்பதாக கூறியுள்ளனர்.