227க்கும் மேற்பட்ட வீடுகளை சூழ்ந்த வெள்ள நீர்
காவிரி ஆற்றில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் குடியிருப்பு பகுதியில் சூழ்ந்துள்ளது.
காவிரி ஆற்றில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் குடியிருப்பு பகுதியில் சூழ்ந்துள்ளது. சுமார் 227க்கும் அதிகமான வீடுகளில் வெள்ளநீர் புகுந்தது. இதனை தொடர்ந்து அப்பகுதி மக்கள் பாதுகாப்பாக அப்புறப்படுத்தப்பட்டு, சமுதாயக்கூடம், அரசு பள்ளிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான வசதிகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.
வீடுகளை இழந்த மக்களுக்கு உணவு வழங்கப்பட்டது
பவானி சாகர் அணையில் வினாடிக்கு 50 ஆயிரம் கன அடி நீர் திறப்பால், தாழ்வான குடியிருப்புகளில் வெள்ள நீர் சூழ்ந்தது. இதனால் அங்குள்ள மக்கள், வீடுகளை விட்டு வெளியேறி, முகாம்கள், திருமண மண்டபங்கள், பள்ளிகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், வீடுகளை இழந்த மக்களுக்கு, பொது சுகாதாரத்துறை, வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை சார்பில், உணவு வழங்கப்பட்டது.
வீடுகளுக்குள் புகுந்த வெள்ள நீர்- மக்கள் அவதி
கோவை மாவட்டம் வால்பாறையில் வெள்ள நீர் வீடுகளுக்குள் புகுந்ததால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகினர். வனப்பகுதியில் பெருக்கெடுத்து ஓடும் காட்டாற்று வெள்ளம், வாழைத்தோட்டம், தேயிலை தோட்டத்தையும் சூழ்ந்துள்ளது. பாதிக்கப்பட்ட இடங்களில் வருவாய், காவல் மற்றும் தீயணைப்பு துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். அங்குள்ள சோலையார் அணை முழுக் கொள்ளளவை தாண்டிய நிலையில் இருப்பதால் மக்கள் அச்சத்துடன் உள்ளனர்.