புதுச்சேரி மாநிலத்தில் மதுக்கடைகள் திறக்கப்படவில்லை - முதலமைச்சர் நாராயணசாமி அமைச்சர்களுடன் அவசர ஆலோசனை
புதுச்சேரி மாநிலத்தில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி ஒப்புதல் அளிக்காததால் மதுக்கடைகளை திறக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
ஊரடங்கு தளர்த்தப்பட்ட நிலையில் தமிழகத்தை போன்று புதுச்சேரியில் மதுக்கடைகளை திறக்க அம்மாநில அரசு முடிவு செய்தது. இது தொடர்பாக
புதுச்சேரி அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டு கோப்புகள் துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு அனுப்பப்பட்டது. அதற்கு அனுமதி அளிக்க கோரி அமைச்சர் நமச்சிவாயம் ஆளுநரை நேரில் சந்தித்து வலியுறுத்தினார். ஆனால் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி ஒப்புதல் அளிக்காததால் புதுச்சேரி மாநிலத்தில் மதுக்கடைகளை திறக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து முதலமைச்சர் நாராயணசாமி அமைச்சர்களுடன் அவசர ஆலோசனை நடத்தினார். அந்த கூட்டத்தில் அரசு உயர் அதிகாரிகளும் பங்கேற்றனர். புதுச்சேரியில் மதுபானங்களின் விலை குறைவு என்பதால் மதுக்கடைகளை திறந்தால் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள கடலூர் , விழுப்புரம் மாவட்டங்களில் இருந்து நிறைய பேர் வருவார்கள் என்றும் இதனால் கொரோனா தொற்று அதிகமாகும் என்றும் கூறப்படுகிறது. இதனால் மதுப்பாட்டில்களின் விலையை உயர்த்துவது குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது