தமிழர்களுக்கு எதிராக தொடரும் சம்பவங்கள் : இந்தியா - இலங்கை உறவு வலுப்படுமா?

இந்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர், இலங்கை சென்று திரும்பியதில் இருந்து தொடரும் நிகழ்வுகள், இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை அலசுகிறது இந்தத் தொகுப்பு....

Update: 2021-01-23 02:31 GMT
இந்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர், இலங்கை சென்று திரும்பியதில் இருந்து தொடரும் நிகழ்வுகள், இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை அலசுகிறது இந்தத் தொகுப்பு....இலங்கை அரசின் முக்கிய பிரதிநிதிகள் உடனான, இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரின் சந்திப்பு, இரு நாட்டு உறவை வலுப்படுத்துவதில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டது.கடந்த 5ம் தேதி முதல் 7ம் தேதி வரை இலங்கையில் அரசு முறை பயணம் மேற்கொண்ட, வெளியுறவு துறை அமைச்சரும் இதையே உறுதிப்படுத்தினார்.ஆனால், அவர் நாடு திரும்பிய அடுத்த நாளே யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் நிறுவப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூண், இலங்கை ராணுவத்தின் துணையோடு தகர்க்கப்பட்டது.மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்தைத் தொடர்ந்து,மாணவர்களின் தொடர் போராட்டம், உலகளாவிய அழுத்தத்திற்கு பிறகே, மீண்டும் அதே இடத்தில் நினைவுத்தூண் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது.இதைத் தொடர்ந்து, 18ம் தேதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள நெடுந்தீவு, அனலைத்தீவு, நயினாதீவு ஆகியவற்றில், மின் உற்பத்தி நிலையம் அமைக்க சீன அரசுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டதாக தெரிகிறது.  இதில் நெடுந்தீவு, கச்சத்தீவுக்கு மிக அருகாமையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.தொடர்ந்து, முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள குருந்தூர் மலையில், தமிழ் மக்கள் வழிபட்டு வந்த ஆதி அய்யனார் ஆலய சூலம் தகர்க்கப்பட்டது. இந்த இடத்தில் புத்த விகாரின் சிதைவுகள் இருப்பதாகக் கூறி, ராணுவ பாதுகாப்புடன் தொல்லியல் ஆய்வுகள் தொடங்கப்பட்டன.இதேபோல், யாழ்ப்பாணம் - நிலாவரை கிணறு அருகே, இலங்கையின் தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வுப் பணியை மேற்கொண்டனர். இதற்கிடையே, கச்சத்தீவு அருகே மீன்பிடித்த போது, இலங்கை படையினரால் சிறைபிடிக்கப்பட்ட நாற்பது மீனவர்கள், நிபந்தனைகளுடன் விடுவிக்கப்பட்ட நிலையில்தான்... புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த மெசியா, நாகராஜ், செந்தில்குமார், சாம்சன் ஆகிய நான்கு மீனவர்கள் இலங்கை கடற்படையால் கொல்லப்பட்டுள்ளனர்.நான்கு மீனவர்களும் விசைப்படகோடு மூழ்கடிக்கப்பட்டு, கொல்லப்பட்டிருப்பது தமிழகத்தில் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது.


Tags:    

மேலும் செய்திகள்