ஆண்டுதோறும் ராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாட்டம் - வீரர்களுக்கு இனிப்பு வழங்கி வாழ்த்து தெரிவித்த பிரதமர்

தீபாவளிப் பண்டிகையை, ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் ராணுவ வீரர்களுடன் கொண்டாடிய பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவை யாரேனும் தீய நோக்கத்துடன் சீண்டினால், ராணுவ வீரர்கள் அவர்களுக்கு தக்க பதிலடி கொடுப்பார்கள் என்றார்.

Update: 2020-11-15 03:03 GMT
ஒவ்வொரு ஆண்டும் தீபாவளிப் பண்டிகையின் போது, ஏதாவதொரு ராணுவ முகாமில் பிரதமர் மோடி ராணுவ வீரர்களுடன் தீபாவளியை கொண்டாடி வருகிறார். 2014ஆம் ஆண்டு லடாக்கில் உள்ள சாய்ச்சென் முகாமிற்கு சென்றது முதல், தற்போது வரை அவர் இதை மேற்கொண்டு வருகிறார்.

தீபாவளி நாளில் முப்படை தளபதி பிபின் ராவத் மற்றும் ராணுவ தளபதி முகுந்த் நரவனே உடனிருக்க, ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் உள்ள லாங்கேவாலா முகாமிற்கு பிரதமர் மோடி சென்றார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. 

இதையடுத்து, இந்திய ராணுவத்துக்கு சொந்தமான பீரங்கியில் பயணம் செய்த பிரதமர் மோடி லாங்கிவாலா முகாமில் வலம்வந்தார். அப்போது அவர் ராணுவ உடை அணிந்திருந்தார். பாதுகாப்பு பணியின் போது, வீர மரணம் அடைந்து, உயிர்த்தியாகம் செய்த வீரர்களின் நினைவிடத்தில், மலர் வளையம் வைத்து பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார். பின்னர், ராணுவ வீரர்களுக்கு பிரதமர் மோடி இனிப்பு வழங்கி, வீரர்களுக்கு தீபாவளி வாழ்த்துக்களை பரிமாறி கொண்டார். 

அங்கு ராணுவ வீரர்கள் மத்தியில் உரையாற்றிய பிரதமர் மோடி, இந்தியாவை யாரேனும் தீய நோக்கத்துடன் சீண்டினால், ராணுவ வீரர்கள் அவர்களுக்கு தக்க பதிலடி கொடுப்பார்கள் என்றார். சர்வதேச அளவில், தங்களது நாட்டின் எல்லைகளை விரிவுப்படுத்தும் எண்ணம் அதிகரித்துள்ளதாகவும் இது தற்போது மிகப்பெரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளதாகவும் அவர் கூறினார். எல்லைப்பகுதியை ஆக்கிரமிக்க முயற்சித்தவர்களை இந்தியா ஓட ஓட விரட்டியதாக சீனாவை பிரதமர் மோடி மறைமுகமாக சாடினார். வல்லரசு நாடுகளுடன் இணைந்து இந்திய வீரர்கள் போர் பயிற்சி எடுத்து வருவதாகவும், அந்த நாடுகளுடன் இணைந்து, தீவிரவாதத்தை ஒழிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். 


இதைத் தொடர்ந்து, பிரதமர் மோடி லாங்கிவாலா முகாமில் உள்ள அருங்காட்சியகத்தை பார்வையிட்டார். அடுத்ததாக, விமானப்படை வீரர்களின் முகாமிற்கு சென்று, விமானப்படை வீரர்களுக்கு இனிப்பு வழங்கி வாழ்த்து தெரிவித்தார். ஜம்மு காஷ்மீர், உத்தர்காண்ட், ஹிமாச்சல் பிரதேசம், பஞ்சாப் முகாம்கள் வரிசையில், பிரதமர் மோடியின் தீபாவளி கொண்டாட்டத்தில், ராஜஸ்தான் முகாமும் சேர்ந்துள்ளது.  
Tags:    

மேலும் செய்திகள்