தொகுதி மேம்பாட்டு நிதியை பயன்படுத்துவதில் வெளிப்படைத்தன்மை வர சட்டவிதிமுறைகள் வேண்டும் - மத்திய தகவல் ஆணையம்

தொகுதி மேம்பாட்டு நிதியை எம்.பி.க்கள் பயன்படுத்துவதில் வெளிப்படைத்தன்மை கொண்டு வர, புதிய சட்டவிதிமுறைகளை ஏற்படுத்த வேண்டும் என மத்திய தகவல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.

Update: 2018-09-17 07:32 GMT
மக்களவை சபாநாயகர் அலுவலகம் மற்றும் மாநிலங்களவை தலைவர் அலுவலகத்துக்கு மத்திய தகவல் ஆணையர் ஸ்ரீதர் ஆச்சார்யலு 54 பக்க கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அந்தக் கடிதத்தில், எம்.பி.க்கள் தொகுதி மேம்பாட்டு நிதியை பயன்படுத்தும்போது, வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புடைமையை ஏற்படுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடமை தவறினால் எம்.பி.க்களை பொறுப்பாக்குவது, விதிமுறைகளை மீறினால் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து புதிய சட்ட விதிமுறைகளை வகுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. தொகுதி மேம்பாட்டு நிதியை தகுதியற்ற நிறுவனங்களுக்கு பரிந்துரைப்பது, நிதியை தனியார் அறக்கட்டளைக்கு மாற்றிவிடுவது, எம்.பிக்களின் உறவினர்கள் பயன்படுத்தும் வகையில் நிதியை பயன்படுத்துவது போன்றவை தடுக்கப்பட வேண்டும் எனக அதில் கூறப்பட்டுள்ளது.

மேற்கொள்ளப்பட்ட திட்டப்பணிகளின் நிலை, பயனாளிகளின் விவரங்கள் அடங்கிய அறிக்கையை ஆண்டுதோறும் எம்.பிக்கள் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் எம்.பி.க்களின் பதவிக்காலம் முடிந்தபின்பு, பணிக்காலத்தில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்த விவரங்களை மக்களவை மற்றும் மாநிலங்களவை அலுவலகங்களில் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் வாக்காளர்கள் விவரம் கேட்டால், அவற்றுக்கு எம்.பி.க்கள் பதில் அளிக்க வேண்டும் எனவும் தகவல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்