அ.தி.மு.க. "49" - எம்.ஜி.ஆர் முதல் ஈ.பி.எஸ் வரை

தமிழகத்தை ஆளும் அ.தி.மு.க. இன்று 49 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. ஒரு தொண்டன் தொடங்கிய அந்தக் கட்சியில் எம்.ஜி.ஆர். தன்னை ஒரு தொண்டராகவே இணைத்துக் கொண்டார். இன்றும் அந்த இயக்கம் ஓ.பி.எஸ். இ.பி.எஸ். என்ற இரு தொண்டர்களால் வழிநடத்தப்படுகிறது.
அ.தி.மு.க. 49 - எம்.ஜி.ஆர் முதல் ஈ.பி.எஸ் வரை
x
கடந்த 1972ஆம் ஆண்டு தி.மு.க-வில் இருந்து வெளியேறிய எம்.ஜி.ஆர். 1972ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இதே நாளில்  அ.தி.மு.க.வில் தன்னை இணைத்துக் கொண்டார்.  

எம்.ஜி.ஆர். புது கட்சி தொடங்கிவில்லை, ஏற்கனவே அனகாபுத்தூர் ராமலிங்கம் என்பவர் பதிவு செய்து வைத்திருந்த அ.தி.மு.க-வில் தன்னை இணைத்துக்கொண்டார். 

ஒரு தொண்டன் தொடங்கிய கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டதாகவும் அறிவித்தார். 

பின்னர் கட்சியின் பெயரை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் என்று மாற்றினார், எம்.ஜி.ஆர். 

1973ஆம் ஆண்டு நடைபெற்ற திண்டுக்கல் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் அதிமுக முதல் வெற்றியை ருசித்தது.

அடுத்த 4 ஆண்டுகளில் அதாவது 1977ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ஆட்சியை பிடித்து தமிழகத்தின் முதலமைச்சர் ஆனார் எம்.ஜி.ஆர். 

தொடர்ந்து 11ஆண்டுகள் தமிழகத்தின் ஆட்சி கட்டிலில் அ.தி.மு.க.வை அமரவைத்து, முதலமைச்சராக கோலோச்சினார்.

எம்.ஜி.ஆர். மறைவுக்கு பிறகு கட்சி இரண்டாக உடைந்தது. அப்போது கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளராக இருந்த ஜெயலலிதா தலைமையில் ஜெ அணி என்றும், எம்.ஜி.ஆர். மனைவி ஜானகிஅம்மாள் தலைமையில் ஜா அணி என்றும் உருவானது.

1989ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலை எதிர்கொண்டனர். அந்த தேர்தலில் இரட்டை இலை என்ற சின்னமே இல்லை, தேர்தல் ஆணையத்தால் முடக்கப்பட்டது.

அடுத்த ஒரே ஆண்டில் ஜெயலலிதா - ஜானகி சமாதானம் ஆகி அதிமுக ஒன்றிணைந்தது. 

மீண்டும் இரட்டை இலை சின்னம் கிடைக்க  நிர்வாக காரணங்களால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அப்போதைய மதுரை கிழக்கு, மருங்காபுரி ஆகிய தேர்தல்களில் அதிமுக வெற்றிபெற்றது.

1991ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் அதிமுக மிகப்பெரிய வெற்றியைப் பெற்று ஜெயலலிதா தலைமையில் ஆட்சி அமைத்தது. 

அதன்பிறகு 2001 மற்றும் 2011, 2016ஆம் ஆண்டுகளில் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த அ.தி.மு.க. 2011, 2016 என எம்.ஜி.ஆருக்குப் பிறகு ஜெயலலிதா தலைமையில் தொடர் வெற்றியைப் பெற்றது. 

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு 2017ஆம் ஆண்டு மீண்டும் அ.தி.மு.க. பிளவைச் சந்தித்து. இரட்டை இலை முடக்கப்பட்டது.

சசிகலா தலைமையில் அதிமுக அம்மா அணி என்றும், ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணி என்றும்  ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் களம் கண்டனர். 

அடுத்த  ஆறே மாதங்களில் அ.தி.மு.க. ஒன்றிணைந்து, அதிமுக பொதுச்செயலாளர் என்ற பதவிக்குப் பதிலாக 2016ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுக்குழுவில்  இரட்டை தலைமை அக்கட்சியில் உருவானது.  

சம அதிகாரங்களுடன் அ.திமு.க.வின் ஒருங்கிணைப்பாளராக ஓ. பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக  எடப்பாடி பழனிச்சாமியும் அறிவிக்கப்பட்டனர். மீண்டும் இரட்டை இலை மீட்கப்பட்டது.  

எம்.ஜி.ஆர். ஜெயலலிதாவுக்குப் பிறகு அ.தி.மு.க.வின் முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார் எடப்பாடி பழனிசாமி. 

அ.தி.மு.க.வின் அரிச்சுவடிப்படி, ஓ.பி.எஸ். ஈ.பி.எஸ். என்ற இரண்டு தொண்டர்கள் அக்கட்சியின் தொண்டர்களை வழிநடத்த தலைவர்களாக மாறியிருக்கிறார்கள். 

1972ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட அ.தி.மு.க., எம்.ஜி.ஆர்., நெடுஞ்செழியன், ஜானகி, ஜெயலலிதா, ஓ. பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி என
6 முதலமைச்சர்களை கடந்த 49 ஆண்டுகளில் உருவாக்கியுள்ளது.

மூன்றாம் முறையாகவும் அ.தி.மு.க.வை ஆட்சிக்கட்டிலில் ஏற்றுவார்களா இருவர்? விடை சொல்லப்போகிறது 2021 சட்டமன்ற தேர்தல்.  


Next Story

மேலும் செய்திகள்