அரியானாவில் மீண்டும் ஆட்சி அமைக்க பா.ஜ.க. தீவிரம்
அரியானாவில் முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் தலைமையில் இடம்பெற்றிருந்த அமைச்சர்களில் 2 பேர் மட்டுமே மீண்டும் வெற்றி பெற்றுள்ள நிலையில், ஆட்சி அமைப்பதில் பா.ஜ.க. தீவிரமாக களம் இறங்கி உள்ளது.
அரியானா சட்டப் பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் வெளியானது. இதில் முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் தலைமையிலான அமைச்சரவையில் இடம் பெற்ற 8 அமைச்சர்கள் தேர்தலில் தோல்வியை தழுவியுள்ளனர்.
அனில்விஜ், பன்வாரி லால் மட்டுமே வெற்றி பெற்றுள்ளனர்.
ஏற்கனவே கட்டார் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த 2 மூத்த அமைச்சர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படவில்லை.
மொத்தமுள்ள 90 தொகுதிகளில் 46 தொகுதிகளில் வெற்றி பெற்றால் ஆட்சி அமைக்க முடியும்.
இந்நிலையில், 75 தொகுதிகளில் வெற்றி பெறும் இலக்குடன் களம் இறங்கிய பா.ஜ.க. ஆதரவில்லாமல் ஆட்சி அமைக்க முடியாத அளவுக்கு 40 தொகுதிகளில் தான் வெற்றி பெற்றுள்ளது.
இந்நிலையில், ஜன்நாயக் ஜனதா கட்சி ஆதரவுடன் ஆட்சி அமைக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், அந்த கட்சியின் ஆதரவு கிடைக்காத நிலையில், சுயேட்சைகள் ஆதரவுடன் ஆட்சி அமைக்க பா.ஜ.க. களம் இறங்கி உள்ளது.
இதற்காக, மனோகர் லால் கட்டார் டெல்லியில் முகாமிட்டுள்ளார்
இதனிடையே, ஆட்சி அமைக்க மக்களால் அங்கீகரிக்கப்படாத பா.ஜ.க., ஆட்சி அமைக்க எடுத்து வரும் நடவடிக்கைகளை மக்கள் பார்த்துக் கொண்டு தான் உள்ளதாக மத்தியப் பிரதேச முதலமைச்சர் கமல்நாத் அக்கட்சியை மறைமுகமாக சாடியுள்ளார்
இதனிடையே இன்று பிற்பகல் 2 மணிக்கு ஜன்நாயக் ஜனதா கட்சி கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
Next Story