உயர்நீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார் ஹெச்.ராஜா
காவல் மற்றும் நீதித் துறையை அவமதித்து பேசிய வழக்கு தொடர்பாக பாஜக தேசிய செயலாளர் ஹெ.ராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் மன்னிப்பு கோரினார்.
புதுக்கோட்டை மாவட்டம் மெய்யபுரம் கிராமத்தில், விநாயகர் சதுர்த்தி விழாவின் போது போலீஸார் மேடை அமைக்க அனுமதி அளிக்கவில்லை. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா உயர்நீதிமன்றத்தையும் போலீஸாரையும் விமர்சித்திருந்தார். இதையடுத்து அவர் மீது தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சி.டி.செல்வம் மற்றும் நிர்மல்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு பதிவு செய்தது.
இந்த வழக்கில் ஹெச்.ராஜா நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கவும் உத்தரவிடப்பட்டது. இதன் அடிப்படையில் நீதிபதிகள் முன்பு ஹெச்.ராஜா நேரில் ஆஜராகி பதில் மனுத்தாக்கல் செய்தார். அதில் உணர்ச்சி வேகத்தில் தவறுதலாக கருத்தை தெரிவித்ததாகவும், எந்த உள்நோக்கமும் இல்லை என்றும் கூறியுள்ளார். இதற்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவதாகவும் ஹெச்.ராஜா கூறியதை ஏற்றுக்கொண்டு, அவறுக்கு எதிரான வழக்கை முடித்துவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Next Story