ஹெச். ராஜாவுக்கு சம்மனா? வாரண்ட்டா? உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு
பாஜக முன்னாள் தேசிய செயலாளர் ஹெச். ராஜாவுக்கு கீழமை நீதிமன்றம் அனுப்பிய சம்மனை தாக்கல் செய்யுமாறு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2018ஆம் ஆண்டு திருமயம் பகுதியில் கோயில் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள ஹெச். ராஜா சென்ற போது மேடை அமைப்பது தொடர்பாக பிரச்சினை ஏற்பட்டது. இது தொடர்பாக திருமயம் காவல் ஆய்வாளர் மனோகரன் அளித்த புகாரின் அடிப்படையில் ஹெச்.ராஜா உள்ளிட்ட பல்வேறு நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் திருமயம் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது .
இந்த வழக்கில் தமக்கு முன்ஜாமின் வழங்க
கோரி ஹெச்.ராஜா மனு தாக்கல் செய்துள்ளார்.
குற்ற பத்திரிக்கையில் தான் தலைமறைவாக உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளதாகவும், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அவ்வாறு கூறப்பட்டுள்ளதாகவும் ஹெச்.ராஜா மனுவில் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கு விசாரணைக்கு ஆஜராக கீழமை நீதிமன்றம் தனக்கு சம்மன் அனுப்பி உள்ளதாகவும்,
காவல்துறையினர் கைது நடவடிக்கையில் ஈடுபடாமல் இருப்பதற்காக தனக்கு முன் ஜாமின் வழங்க வேண்டும் என்றும் ஹெச்.ராஜா மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது ஹெச். ராஜாவிற்கு முன்ஜாமின் வழங்க எதிர்மனுதாரர் துரைசாமி தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
அப்போது நீதிபதி, காவல்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில் தலைமறைவு என தெரிவிக்கப்பட்டுள்ளதால் மனுதாரர் ஹெச். ராஜாவுக்கு கீழமை நீதிமன்றம் அனுப்பியது சம்மனா அல்லது வாரண்டா என்று கேள்வி எழுப்பினார்.
ஹெச். ராஜாவுக்கு கீழமை நீதிமன்றம் அனுப்பிய சம்மனை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூலை 19ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.