"கோவில் புறம்போக்கு நிலம் எவ்வளவு" - விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவு
தமிழகம் முழுவதும் கோவில் புறம்போக்கு என வகைப்படுத்தப்பட்ட நிலங்கள் குறித்த விவரங்களை தாக்கல் செய்ய, தமிழக அரசுக்கும், அறநிலையத் துறைக்கும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.;
சேலம் மாவட்டம் உலிபுரத்தில் உள்ள கம்பராய பெருமாள் கோவிலுக்கு சொந்தமான 3.88 ஏக்கர் நிலத்தை, ஆனந்தன் என்பவர் ஆக்கிரமித்து உள்ளதாகவும், ஆக்கிரமிப்பை அகற்றி நிலத்தை மீட்க அறநிலையத்துறை, சேலம் மாவட்ட நிர்வாகம், கோவில் நிர்வாகத்துக்கு உத்தரவிடக் கோரி, சேலத்தை சேர்ந்த ஏ.ராதாகிருஷ்ணன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு, நீதிபதிகள் என்.கிருபாகரன் மற்றும் எஸ்.கண்ணம்மாள் அமர்வில் விசாரணைக்கு வந்தது.அப்போது, அனைத்து மாவட்டங்களிலும், வட்ட வாரியாக கோவில் புறம்போக்கு என வகைப்படுத்தப்பட்ட நிலங்கள் குறித்த விவரங்களை தாக்கல் செய்யும்படி, தமிழ்நாடு நில நிர்வாக ஆணையர் மற்றும் அறநிலையத்துறை ஆணையர் ஆகியோருக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஜூலை 9ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.