சட்டப்பேரவை தேர்தலுக்கு பிறகே பொதுத்தேர்வு - தமிழக அரசிடம் சமர்ப்பித்த அறிக்கையில் தகவல்
சட்டப்பேரவை தேர்தலுக்கு பிறகே பொதுத் தேர்வுகள் நடைபெறும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொரோனா காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தள்ளிவைக்கப்பட்டுள்ளது . ஜனவரி மாதத்தில் பள்ளிகள் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், பொதுத்தேர்வை சந்திக்கும் 10,11 மற்றும்12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி முறையில் ஒரு சில மாதங்கள் வகுப்புகள் நடத்திய பிறகு பொதுத் தேர்வை நடத்துவது என முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
நடப்பாண்டில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்த பரிந்துரை அறிக்கையை இரண்டு மாதங்களுக்கு முன்பு, அப்போதைய பள்ளிக்கல்வி ஆணையர் சிஜி தாமஸ், தமிழக அரசிடம் சமர்ப்பித்தார்.
அதில், 10,11 மற்றும்12 ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வை சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு, ஜூன் மாதம் நடத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மார்ச், ஏப்ரல் மாதங்களில் பொதுத் தேர்வு கிடையாது எனவும், தேர்வுகள் தள்ளிப்போகின்றன எனவும், கடந்த வாரம் கல்வித்துறை உயர் அதிகாரி ஒருவர் திட்டவட்டமாக தெரிவித்திருந்த நிலையில், தற்போது இந்த தகவல் வெளியாகி உள்ளது.