கீழடியில் 6 வது கட்ட அகழாய்வு பணிகள் தொடக்கம்
கீழடியில் ஆறாம் கட்ட அகழாய்வு பணிகளை, சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
சிவகங்கை மாவட்டம், கீழடியில் இதுவரை 5 கட்டமாக அகழ்வாய்வு பணிகள் நடைபெற்றுள்ளன. இந்த ஆய்வுகள் மூலம் வைகை கரை நாகரிகம் 2 ஆயிரத்து 500 ஆண்டுகள் பழமையானது என்பது தெரிய வந்தது. இந்த பணிகளை விரிவுபடுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்த நிலையில், ஆறாவது கட்ட அகழ்வாய்வு பணிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற விழாவில் காணொலி காட்சி மூலம் துவக்கி வைத்தார். கீழடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன், மதுரை தொகுதி எம்.பி. வெங்கடேசன், தமிழக தொல்லியல் துறை இணை இயக்குனர் சிவானந்தம் ஆகியோர் பங்கேற்றனர்.