"பஞ்சாபின் முதல்வர் வேட்பாளர் நான் அல்ல" - டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பேட்டி
பஞ்சாப் மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான முதலமைச்சர் வேட்பாளரை ஆம் ஆத்மி விரைவில் அறிவிக்கும் என்று அக்கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் மாநில சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்ள ஆம் ஆத்மி கட்சி முழு மூச்சில் தயாராகி வருகிறது. இதனை தொடர்ந்து தேர்தலுக்கான ஆயத்த நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்வதற்காக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இரண்டு நாள் பயணமாக பஞ்சாப் சென்றுள்ளார்.இந்த நிலையில் அமிர்தசரஸில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பஞ்சாபின் முதலமைச்சர் வேட்பாளர் தான் அல்ல எனவும் மற்ற கட்சிகளுக்கு முன்பாக ஆம் ஆத்மி முதலில் முதல்வர் வேட்பாளரை அறிவிக்கும் என்றும் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர் டெல்லியில் உள்ள அரசு பள்ளிகளை போலவே பஞ்சாபில் உள்ள அரசு பள்ளிகளையும் தரம் உயர்த்துவோம் எனவும் அதனை எப்படி செய்வது என்பது தங்களுக்கு மட்டுமே தெரியும் எனவும் கெஜ்ரிவால் குறிப்பிட்டார்.