தொழிலதிபரை கொடூரமாக கொன்ற கும்பல் : உடலை சூட்கேஸில் வைத்து ரயிலில் அனுப்பிய பயங்கரம் - முறையற்ற உறவால் பறிபோன தொழிலதிபரின் உயிர்

டெல்லியில் முறையற்ற உறவு காரணமாக தொழிலதிபர் கொடூரமாக கொல்லப்பட்ட வழக்கில் பெண் தோழி உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2020-11-20 07:51 GMT
டெல்லியில் முறையற்ற உறவு காரணமாக தொழிலதிபர் கொடூரமாக கொல்லப்பட்ட வழக்கில் பெண் தோழி உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். தலைநகரில் நடந்த இந்த பகீர் சம்பவத்தின் பின்னணியில் நடந்தது என்ன? இப்போது பார்க்கலாம்.

டெல்லியில் பிரபலமான தொழிலதிபர் என்ற அடையாளத்துக்கு சொந்தக்காரர் நீரஜ் குப்தா. 45 வயதான இவருக்கு, தன் நிறுவனத்தில் வேலை பார்த்த பைசல் என்ற 29 வயது பெண்ணுடன் தகாத உறவு இருந்துள்ளது. 

ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள் இருப்பதை அறிந்தாலும் கூட பைசலும், குப்தா உடனான உறவை தொடர்ந்துள்ளார் பைசல். ஒரு கட்டத்தில் பைசலுக்கு ஜூபர் என்ற இளைஞருடன் காதல் ஏற்படவே, அவரை திருமணம் செய்யவும் திட்டமிட்டார். 

இந்த விவகாரம் நீரஜ் குப்தாவுக்கு தெரியவரவே, அவர் தன் காதலியை கண்டித்துள்ளார். தன்னை மீறி யாரையும் திருமணம் செய்யக் கூடாது என கடுமையாக எச்சரித்துள்ளார். ஆனால், தனக்கென ஒரு வாழ்க்கை அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த பைசல், அதற்கான ஏற்பாடுகளையும் செய்து வந்துள்ளார். 

இதனால் ஆத்திரமடைந்த குப்தா, நேராக பைசல் வீட்டிற்கு சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது அங்கே இருந்த பைசலின் வருங்கால கணவர் ஜூபர் மற்றும் பைசலின் தாய் ஆகியோர் செங்கல்லை எடுத்து குப்தாவின் தலையில் அடித்துள்ளனர். 

இதில் மயங்கி விழுந்த குப்தாவின் வயிற்றில் பலமுறை கத்தியால் குத்தியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். பின்னர் அவரது உடலை ஒரு சூட்கேஸில் வைத்து அடைத்து அதை ரயிலில் ஏற்றி குஜராத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். நடந்த இந்த சம்பவங்கள் எல்லாம் ஏற்கனவே திட்டமிடப்பட்டு இருந்துள்ளது. 

குஜராத்திற்கு சென்ற உடலை யாருக்கும் தெரியாமலேயே அப்புறப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே, கணவனை காணாமல் தவித்த குப்தாவின் மனைவி போலீசில் அளித்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய போது தான் நடந்த இத்தனை சம்பவங்களும் வெளிச்சத்திற்கு வந்தது. 

கடந்த 13 ஆம் தேதி நடந்த இந்த சம்பவத்தில் கிட்டத்தட்ட 6 நாட்களுக்கு பிறகு கொலையாளிகள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பைசலின் வருங்கால கணவர் ஜூபர் ரயில்வேயில் வேலை பார்த்து வருபவர் என்பதால் உடலை ரயிலில் அனுப்பி அப்புறப்படுத்தும் திட்டத்தை அரங்கேற்றியிருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. 

10 வருடங்களுக்கும் மேலாக பைசலுடன் முறையற்ற உறவில் இருந்த நீரஜ் குப்தா, இன்று அதே பெண்ணால் கொடூரமாக கொல்லப்பட்டிருப்பது உறவினர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.... 

Tags:    

மேலும் செய்திகள்