மகாராஷ்டிரா: மூன்று மாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்து - 10 பேர் உயிரிழப்பு
மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது. பிவாண்டியில் உள்ள படேல் காம்பவுண்ட் பகுதியில் இன்று அதிகாலை மூன்று மாடி கட்டடம் இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் கட்டடத்தில் உறங்கிக்கொண்டிருந்தவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டனர். இடிபாடுகளிலிருந்து இது வரை 10 பேர் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளனர். இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த குழந்தையை என்.டி.ஆர்.எஃப் குழு மீட்டது.
மகாராஷ்டிர கட்டட விபத்து - பிரதமர் மோடி இரங்கல்
மகாராஷ்டிர கட்டட விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள பிரதமர், பிவாண்டி கட்டட விபத்து சம்பவத்தை அறிந்து வருத்தம் அடைந்ததாகவும், கட்டட விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாகவும் பதிவிட்டுள்ளார். விபத்தில் காயம் அடைந்தவர்கள், விரைவாக குணமடைய பிரார்த்திப்பதாகவும், மீட்பு நடவடிக்கைகள் நடந்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.