14 வயது சிறுமியை காதலித்த 17 வயது சிறுவன் - காதலை கைவிடுமாறு கூறி சிறுவன் மீது தாக்குதல்

வேலூரில் காதலை கைவிடுமாறு கூறி நடத்தப்பட்ட கொடூர தாக்குதலில் 17 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
14 வயது சிறுமியை காதலித்த 17 வயது சிறுவன் - காதலை கைவிடுமாறு கூறி சிறுவன் மீது தாக்குதல்
x
வேலூர் மாவட்டம் ஆரணி சாலையை சேர்ந்த 17 வயது சிறுவன், ஓட்டல் உரிமையாளரின் 14 வயது மகளை காதலித்து வந்துள்ளார். இருவரும் காதலித்து வந்த நிலையில் இவர்களின் காதலுக்கு பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கடந்த 23ஆம் தேதி சிறுமி, தன் காதலனான சிறுவனுடன் வீட்டை விட்டு ஓடிவிட்டதாக கூறி சிறுமி தரப்பு போலீசில் புகார் அளித்திருந்தது. இதன்பேரில் சிறுமி மாயம் என கூறி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். 

இதனிடையே கடந்த 24ஆம் தேதி இருவரும் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருப்பது தெரியவந்தது. இதனை அறிந்த பெண் வீட்டார் நேராக அங்கு சென்று இருவரையும் பிடித்தனர். பின்னர் சிறுவனை போலீசில் ஒப்படைக்காமல் நேராக தங்கள் வீட்டிற்கு அழைத்துச் சென்று கடுமையாக தாக்கி உள்ளனர். அப்போது பிளேடால் சிறுவனை உடலை கிழித்து கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதன்பிறகு சிறுவன் மாடியில் இருந்து விழுந்து விட்டதாக கூறி வேலூர் அரசு மருத்துவமனையில் சிறுவனை அவர்களே அனுமதித்துள்ளனர். இந்த தகவல் சிறுவன் வீட்டாருக்கு தெரியவரவே, அதிர்ந்து போன அவர்கள், நேரில் சென்று பார்த்தனர். அப்போது உடலில் இருந்த காயங்களை கண்டு பதறிப் போன அவர்கள், சிறுவன் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் புகார் அளித்தனர். 

இதன்பேரில் சிறுமியின் தந்தை ராஜகுரு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அதேநேரம் இந்த விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தக்கோரி சிறுவனின் தந்தை வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கடந்த 27ஆம் தேதி புகார் அளித்திருந்தார். இதனை தொடர்ந்து சிறுவனின் உறவினர்கள் கடந்த 29ஆம் தேதி சாலை மறியலிலும் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய மாதவன், செல்வக்குமார் உள்ளிட்ட 4 பேரை போலீசார் அப்போது கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுவன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சிறுவனின் மரணம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதை தொடர்ந்து இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டது. 

இந்த வழக்கில் தொடர்புடைய 4 பேர் தலைமறைவாக உள்ள நிலையில் அவர்களை தேடும் பணியும் நடந்து வருகிறது. சிறுமியின் தந்தை உள்ளிட்டோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டிருந்தாலும், இதில் 11 பேருக்கு தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு முன்வைக்கும் சிறுவன் தரப்பு உறவினர்கள், உரிய நியாயம் வேண்டி நிற்கின்றனர். காதல் விவகாரத்தில் சிறுவன் கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் உறவினர்களை மீளா அதிர்ச்சியில் உறைய வைத்திருக்கிறது.

Next Story

மேலும் செய்திகள்