தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வளைய சூரிய கிரகணத்தை பார்த்து ரசித்த மக்கள்
அதிசய நிகழ்வுகளில் ஒன்றான வளைய சூரிய கிரகணத்தை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மக்கள் பார்த்து ரசித்தனர்.
திருச்சி மன்னார்புரத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் சூரிய கிரகணத்தை பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதனை ஏராளமானோர் தொலைநோக்கி வாயிலாக பார்த்து மகிழ்ந்தனர்.
மதுரை மாநகரில் 26 சதவீதம் சூரிய கிரகணம் தெரிந்ததாக கூறப்படுகிறது. இதனை பல்வேறு உபகரணங்களை கொண்டு மக்கள் பார்த்தனர். கிரகணத்தை முன்னிட்டு மதுரை மீனாட்சி அம்மன் கோயில், கள்ளழகர் கோயில், திருப்பரங்குன்றம் முருகன் கோயில் உள்ளிட்ட கோயில்களின் நடை அடைக்கப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே சூரிய கிரகணத்தை பொதுமக்கள் பார்க்க அறிவியல் இயக்கம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது. கிராமப்புற மக்கள் கிரகணத்தை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கி தொலைநோக்கி வாயிலாக பார்க்க வைத்து விளக்கம் அளிக்கப்பட்டது.
இதேபோல் நெல்லையில் சூரிய கிரகணத்தை முன்னிட்டு கொக்கிரகுளத்தில் அறிவியல் மையம் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சூரிய கிரகணத்தை பொதுமக்கள் இணையதளம் வாயிலாக பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததால் ஏராளமான மக்கள் பார்த்து ரசித்தனர்.
Next Story