தேர்வு கண்காணிப்பாளர் தவறால் துணை ஆட்சியர் பதவியை இழந்தவர் - பணி நியமனம் வழங்குவது குறித்து முடிவெடுக்க உயர்நீதிமன்றம் பரிந்துரை

துணை ஆட்சியர் பதவியை இழந்தவருக்காக தனி பதவியை உருவாக்கி பணி நியமனம் வழங்குவது குறித்து முடிவெடுக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது.
தேர்வு கண்காணிப்பாளர் தவறால் துணை ஆட்சியர் பதவியை இழந்தவர் - பணி நியமனம் வழங்குவது குறித்து முடிவெடுக்க உயர்நீதிமன்றம் பரிந்துரை
x
குரூப் 1  தேர்வில் வெற்றி பெற்ற பாபு பிரஷாந்த் என்பவர் டி.எஸ்.பியாக பயிற்சி பெற்று வந்தார். துணை ஆட்சியர் ஆக விரும்பிய அவர், கடந்த 2017ம் ஆண்டு  குரூப் 1 தேர்வில் கலந்து கொண்டு  2 தேர்வுகளை எழுதினார். 3-வது தேர்வில் தவறான பக்கத்தில் எழுதிய விடைகளை அவர் அடித்துள்ளார். இதை கவனித்த தேர்வு அறை  கண்காணிப்பாளர், விடைகளை அடித்த பக்கங்களில் கையெழுத்திட நிர்பந்தித்ததால், அந்த பக்கத்தில்  பாபு பிரஷாந்த்  கையெழுத்திட்டுள்ளார். இதனால் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டு, தேர்ச்சி பட்டியல் வெளியிடப்பட்டு, 29 பேர் பணி நியமனம் பெற்றுள்ளனர்.

இந்நிலையில்,  தேர்ச்சி பட்டியலை எதிர்த்து பாபு பிரஷாந்த், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.  இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்,  விடைத்தாளில் கையெழுத்திட கூறியது தவறு என தேர்வு கண்காணிப்பாளர் வருத்தம் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டி,  கண்காணிப்பாளர்கள், தேர்வு எழுதுபவர்களை முறையாக வழிநடத்த வேண்டும் என அறிவுறுத்தினார். நல்ல மதிப்பெண் பெற்றுள்ள பாபு பிரஷாந்தின் விடைத்தாளை மதிப்பிட்டு, நேர்முக தேர்வு நடத்தி, தகுதி பெற்றால் அவருக்காக புதிய பதவியை உருவாக்கி பணி வழங்குவது குறித்து முடிவெடுக்க தமிழக அரசுக்கு,  நீதிபதி பரிந்துரைத்தார். இந்த உத்தரவு வேறு எந்த வழக்குக்கும்  பொருந்தாது எனவும் நீதிபதி தெளிவுபடுத்தியுள்ளார்.



Next Story

மேலும் செய்திகள்