கோயிலில் திருடப்பட்ட 2 ஐம்பொன் சிலைகள் -24 மணி நேரத்தில் சிலைகளை மீட்ட போலீசார்
மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே பழமையான கோயிலில் திருடப்பட்ட 2 ஐம்பொன் சிலைகளை போலீசார் 24 மணி நேரத்தில் மீட்டனர்.
விக்கிரமங்கலம் அருகே உள்ள கோவில்பட்டியில் ராஜராஜ சோழன் வாரிசுகளால் கட்டப்பட்ட பழமையான மதுரோதய ஈஸ்வரன் கோயில் உள்ளது. அங்கு 48 கிலோ எடை கொண்ட ஐம்பொன்னால் ஆன ஈஸ்வரமுடையார், சிவனேச வல்லிதாயார் உற்சவர் சிலைகள் வழிபாடு செய்யப்பட்டு வந்த நிலையில் கோயில் பூட்டை உடைத்து அந்த சிலைகளை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இது குறித்து கோயில் பூசாரி அளித்த புகாரின் பேரில் போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டனர். விக்கிரமங்கலம் பகுதியை சேர்ந்த வினித் என்ற இளைஞர் சிலைகளை திருடியது தெரிய வந்தது. இதையடுத்து வினித்தை கைது செய்த போலீசார் 2 ஐம்பொன் சிலைகளையும் மீட்டனர்.போலீசாரின் நடவடிக்கைக்கு பொது மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
Next Story