செந்தில் பாலாஜி கருணாநிதியை விமர்சித்து பேசிய கருத்துக்களை சுட்டிக்காட்டிய அமைச்சர் : தி.மு.க, அ.தி.மு.க.வினர் கடும் அமளி

செந்தில் பாலாஜி அதிமுகவில் இருந்த போது திமுகவையும் கருணாநிதியையும் விமர்சித்து பேசிய கருத்துக்களை அமைச்சர் விஜயபாஸ்கர் சுட்டிக்காட்டி பேசியதால் சட்டப்பேரவையில் கடும் அமளி ஏற்பட்டது.
செந்தில் பாலாஜி கருணாநிதியை விமர்சித்து பேசிய கருத்துக்களை சுட்டிக்காட்டிய அமைச்சர் : தி.மு.க, அ.தி.மு.க.வினர் கடும் அமளி
x
சட்டப்பேரவையில் போக்குவரத்து துறை மானிய கோரிக்கை விவாதத்தின் மீது பேசிய அதிமுக உறுப்பினர் பொன்ராஜ், திமுக ஆட்சிகாலத்தில் டீசல் மானியம் வழங்கவில்லை என்றார். அப்போது குறுக்கிட்டு பேசிய திமுக சட்டமன்ற உறுப்பினர் செங்குட்டுவன், அதிமுக ஆட்சிகாலத்தில் போக்குவரத்து துறையில் உள்ள கடனை சுட்டிக்காட்டி பேசினார். இதற்கு பதிலளித்த அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், போக்குவரத்து துறையில் கடன் என்பது இரண்டு ஆட்சி காலத்திலும் இருந்ததாக குறிப்பிட்டார். 

மேலும் செந்தில்பாலாஜி, அதிமுகவில் இருக்கும் போது, தமிழ்நாட்டை பிச்சைப்பாத்திரமாக மாற்றியவர் கருணாநிதி, அட்சயப்பாத்திரமாக மாற்றியவர் ஜெயலலிதா என குறிப்பிட்டு பேசியதை சுட்டிக்காட்டினார். அமைச்சரின் இந்த கருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் அமளியில் ஈடுபட்டனர். கடும் அமளிக்கு மத்தியில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, திமுகவினர் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பதற்காக தான் பேரவையில் செந்தில்பாலாஜி பேசியதை அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார் என விளக்கம் அளித்தார். 

அப்போது குறுக்கிட்டு பேசிய திமுக கொறடா சக்கரபாணி, மறைந்த முதல்வர் ஜெயலலிதா குறித்து அவையில் இடம்பெற்ற கருத்துக்களை திமுகவினர் பேச பேரவை தலைவர் அனுமதிப்பாரா என கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த சபாநாயகர் தனபால் மறைந்த தலைவர்கள் குறித்து பேரவையில் பேச கூடாது என தான் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளதாகவும், ஆனால் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறிய கருத்துக்கள் அவைக்குறிப்பில் ஏற்கனவே உள்ள கருத்துக்கள் என்பதால் நீக்க முடியாது என்றும் விளக்கம் அளித்தார். இதையடுத்து அதிமுக- திமுக உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இந்த அமளி நடைபெற்ற நேரத்தில் செந்தில்பாலாஜி அவையில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்