

கடந்த 2011 முதல் 2015-ம் ஆண்டு வரையிலான அதிமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, வேலை வாங்கி வருவதாக கூறி ஒரு கோடியே 62 லட்சம் ரூபாய் பெற்றுக் கொண்டு மோசடி செய்ததாக சென்னை மத்திய குற்றபிரிவு போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் இருந்து விடுவிக்க கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் நிராகரித்து விட்டது. இந்த நிலையில், கரூரில் உள்ள செந்தில் பாலாஜியின் ஆதவரவாளர்கள் வீடு மற்றும் அலுவலகங்களில் மத்திய குற்றப் பிரிவு போலீசார் சோதனை நடத்தினர்.
சென்னை மேற்கு ஜெ.ஜெ நகரில் உள்ள சென்னை மாநகர போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் கணேசன் வீட்டில் மத்திய குற்றப் பிரிவு ஆய்வாளர் தலைமையில் 6 மணி நேரம் சோதனை நடைபெற்றது. மோசடியில் கணேசனும் ஈடுபட்டுள்ளாரா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது. சென்னையில் சோதனை முடிந்த நிலையில், தமிழகத்தில் சில இடங்களில் சோதனை நடந்து வருவதாக கூறப்படுகிறது.