ஹைட்ரோ கார்பன் திட்டம் : போராட்டம் தொடர்பான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
புதுச்சேரியை போல் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த மாட்டோம் என தமிழக அரசு திட்டவட்டமாக அறிவிக்கவில்லை என சென்னை உயர் நீதிமன்றத்தில் வாதம் நடைபெற்றது.
ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக கடலூர் மாவட்டம் புவனகிரியில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என புதுச்சேரி அரசு திட்டவட்டமாக அறிவித்துள்ளதாக மனுதாரர் தரப்பில் வாதிட்டப்பட்டது. இந்த திட்டத்தை செயல்படுத்த மாட்டோம் என கடந்த 2015-ம் ஆண்டு தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது குறித்து நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த வேதாந்தா நிறுவனத்துக்கு மத்திய அரசு ஒப்பந்தம் வழங்கியுள்ளதாக மனுதாரர் தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டது. இதையடுத்து மனு மீதான விசாரணையை 2 வாரங்களுக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், ஒத்தி வைத்தார்.
Next Story