புதுச்சேரி காங். பொதுச்செயலாளர் கார் மீது தாக்குதல் - அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ஏ.கே.டி.ஆறுமுகம்
புதுச்சேரி மாநில காங்கிரஸ் பொதுச்செயலாளரின் கார் மீது மர்ம கும்பல் ஒன்று கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி மாநில காங்கிரஸ் பொதுச்செயலாளாராக ஏ.கே.டி.ஆறுமுகம் இருந்து வருகிறார். இவர், ஐயங்குட்டிபாளையத்தில் நடந்த ஒரு விழாவில் கலந்து கொண்டு, தனது காரில் வீடு திரும்பி கொண்டிருந்தார். கம்பன் நகர் ரயில்வே கிராசிங் அருகே சென்ற போது, இரு சக்கர வாகனங்களில் வந்த 10பேர் கொண்ட கும்பல் காரை வழிமறித்து கற்களாலும், இரும்பு ராடாலும் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் காரின் முன்பக்க கண்ணாடி உடைந்து நொறுங்கியது. உடனடியாக சுதாரித்துக் கொண்ட ஓட்டுநர் காரை நிறுத்தாமல் அங்கிருந்து தப்பி செல்ல முயன்றுள்ளார். இருப்பினும், ஏ.கே.டி.ஆறுமுகத்தை கொலை செய்வதற்காக ஒரு நபர் வீச்சறிவாளை எடுத்து வீசியதில் காரின் பக்கவாட்டு கண்ணாடி உடைந்ததாக கூறப்படுகிறது. ஆனாலும் ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்த தகவல் வேகமாக பரவியதால் அவர் வீட்டு முன்பு காங்கிரஸ் தொண்டர்கள் இரவில் குவிந்தனர். தாக்குதல் நடந்த இடத்தில் சிசிடிவி கேமிராக்கள் எதுவும் இல்லாததால், குற்றவாளிகளை அடையாளம் காண்பதில் போலீசார் திணறி வருகின்றனர்.
Next Story