பிரபல பெண்கள் குறித்து ஆபாசமாக பேசிய நபர் -களத்தில் இறங்கிய பிரபல டப்பிங் கலைஞர்

பெண்களை பற்றி ஆபாச வசவுகளை அள்ளித் தெளித்தால் என்ன ஆகும்? என்பதை கேரளாவில் நடந்த இந்த சம்பவம் வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறது...
பிரபல பெண்கள் குறித்து ஆபாசமாக பேசிய நபர் -களத்தில் இறங்கிய பிரபல டப்பிங் கலைஞர்
x
ஒரு நபரை இத்தனை பெண்கள் சேர்ந்து அடிக்கும் அளவுக்கு என்னதான் நடந்திருக்கும்...? இத்தனை பெண்கள் சேர்ந்து இப்படியா ஒருவரை போட்டு அடிப்பது என்றெல்லாம் நினைத்துக் கொண்டிருப்போம்... ஆனால் மற்றொரு தரப்பு பெண்களை உச்சி முகர்ந்து கொண்டாடிக் கொண்டிருக்கிறது. அதுவும் மாநில அமைச்சர் ஒருவரே பாராட்டியிருக்கிறார்... அப்படி என்றால் இங்கே தெரிந்து கொள்ள வேண்டியது இவர் ஏன் அடி வாங்குகிறார் என்று தான்... 

பெண்களின் கையால் இப்படி அடி வாங்கும் நபரின் பெயர் விஜய் நாயர். சம்பவம் நடந்த இடமோ கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில்... இவரின் முழுநேர பொழுதுபோக்கே பெண்களை பற்றி ஆபாசமாக பேசி அதை வீடியோவாக பதிவு செய்து தன்னுடைய இணையத்தில் வெளியிடுவது தான்...

சினிமாத்துறை, அரசு அதிகாரிகள், காவல்துறையினர் என யாரையும் விட்டு வைப்பதில்லையாம். பாரபட்சமே பார்க்காமல் பொறுப்பில் உள்ள முக்கிய பெண்கள் பலரைப் பற்றியும் வசவு வார்த்தைகளை அள்ளித் தெளித்து அதன் மூலம் மாநிலத்திலேயே பெரிய டான் போல தன்னை நினைத்துக் கொண்டு செயல்பட்டு வந்திருக்கிறார். 

ஆனால் பூனைக்கு யாராவது ஒருவர் மணி கட்டித்தானே ஆக வேண்டும்? அப்படி களமிறங்கியவர் தான் பிரபல டப்பிங் கலைஞரான பாக்கியலட்சுமி. தமிழ், மலையாள படங்களில் டப்பிங் பேசியிருக்கும் இந்த பெண், தன் தோழிகள் 2 பேரை அழைத்துக் கொண்டு நேராக விஜய் நாயர் தங்கியிருந்த அறைக்கு சென்றிருக்கிறார். 

ஆத்திரமும் ஆவேசமுமாக போன அவர், தான் வைத்திருந்த க்ரீஸ் ஆயிலை விஜய் நாயர் மேல் ஊற்றியதோடு அவரின் செல்போன், லேப்டாப் இவற்றை பறித்து வைத்துக் கொண்டார். நடந்த இந்த சம்பவங்கள் எல்லாம் சமூக வலைதளங்களில் லைவ் செய்யப்பட்டுக் கொண்டே இருந்தது. 

பெண்கள் தொடர்பாக அவர் பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறியதோடு, விஜய் நாயரை மன்னிப்பு கேட்க வைத்து அதையும் வெளியிட்டுள்ளார் பாக்கியலட்சுமி. பெண்களை பற்றி பொதுவெளியில் ஆபாசமாக இனி யாரும் பேசக்கூடாது என்பதற்கான எச்சரிக்கை இது என்றும் கூறி அவர் நடந்த சம்பவத்தை முடித்து வைத்துள்ளார். 

இந்த வீடியோவானது சமூக வலைதளம் முழுக்கவே பரவிய நிலையில் இவர்கள் மீது காவல் நிலையத்தில் வழக்குப்பதிவும் செய்யப்பட்டிருக்கிறது. அதேநேரம் பெண்களின் இந்த துணிச்சலான செயலுக்கு மாநில சுகாதாரத்துறை அமைச்சரான சைலஜா பாராட்டு தெரிவித்துள்ளார். 

பாக்கியலட்சுமி உடன் சென்ற பெண்களில் ஒருவர் சின்னத்திரை நடிகையான தியா சனா. இவர் கடந்த ஆண்டு தனியார்  பேருந்தில் சென்ற போது இளைஞர் ஒருவரால் பாலியல் சீண்டலுக்கு ஆளாகியிருக்கிறார். அப்போது அந்த சம்பவத்தை துணிச்சலாக எதிர்கொண்ட தியா சனா, பொதுவெளியில் அந்த சபல பேர்வழியை மன்னிப்பு கேட்கவைத்து வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.. 

இப்போது மற்றுமொரு நபருக்கு கேரள பெண்கள் துணிச்சலாக பாடம் புகட்டி இருக்கிறார்கள். சினிமாவில் பார்த்த காட்சிகளை எல்லாம் இப்போது கேரளாவில் சேச்சிகள் செய்து கொண்டிருப்பது பல தரப்பில் பாராட்டுகளை பெற்றிருக்கிறது... 


Next Story

மேலும் செய்திகள்