சகோதரிக்கு ஐஸ்கிரீமில் விஷம் கொடுத்து கொன்ற அண்ணன் - தாய், தந்தைக்கும் எலி மருந்தை கொடுத்து கொல்ல முயன்றது அம்பலம்

கேரளாவில் சொத்துக்காக தன் சகோதரிக்கு ஐஸ்கிரீமில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
சகோதரிக்கு ஐஸ்கிரீமில் விஷம் கொடுத்து கொன்ற அண்ணன் - தாய், தந்தைக்கும் எலி மருந்தை கொடுத்து கொல்ல முயன்றது அம்பலம்
x
கேரள மாநிலம் காசர்கோடு அருகே உள்ள வெள்ளரிக்குண்டு கிராமத்தைச் சேர்ந்தவர் பென்னி ஒலிக்கல். இவரின் மனைவி பெஸ்ஸி. இவர்களின் மகன் 22 வயதான ஆல்பின் பென்னி. இவரின் சகோதரி ஆன் மேரி பத்தாம் வகுப்பை முடித்து விட்டு வீட்டில் இருந்துள்ளார். ஆல்பின் பென்னி ஆட்டோ மொபைல் மெக்கானிக் படிப்பை முடித்துவிட்டு ஹோட்டல் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். ஆனால் ஊரடங்கால் வேலை இல்லாமல் சுற்றித் திரிந்த அவர், அடிக்கடி செல்போனில் பேசிக் கொண்டிருந்ததை பெற்றோர் கண்டித்தனர். இதனால் ஆத்திரமடைந்த ஆல்பின், தன் குடும்பத்தை கொல்ல திட்டம் தீட்டியுள்ளார். 

ஏற்கனவே கடந்த ஜூலை மாதம் 31ஆம் தேதி சிக்கனில் விஷம் கலந்து பெற்றோருக்கு சாப்பிட கொடுத்துள்ளார். ஆனால் குறைவான அளவு விஷம் கலந்த உணவு அவர்களுக்கு எந்த வித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. இந்த சூழலில் தான் ஆல்பினின் சகோதரியான ஆன் மேரி ஐஸ்க்ரீம் செய்துள்ளார். இதைக் கொண்டே அவர்களின் குடும்பத்தை ​தீர்த்துக்கட்ட திட்டம் தீட்டினார் ஆல்பின். சகோதரி செய்த ஐஸ்கிரீமில் அதிக அளவு எலி பேஸ்ட்டை கலந்துள்ளார் ஆல்பின். குடும்பத்தில் எல்லாரும் அதை எடுத்து சாப்பிடும் போது, தனக்கு தொண்டை வலி என கூறி தப்பித்துள்ளார் ஆல்பின். ஐஸ்கிரீமை சாப்பிட்ட சகோதரிக்கு வாந்தி மற்றும் வயிற்று போக்கு ஏற்படவே ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் உயிரிழந்தார். தொடர்ந்து பெற்றோரின் உடல் நிலையும் பாதிக்கப்பட்டது. 

ஒரு குடும்பத்தில் 3 பேருக்கு பாதிப்பு ஏற்பட்ட போதிலும் ஒருவர் தப்பியது எப்படி? என்ற கேள்வியே ஆல்பினை போலீசில் சிக்க வைத்தது. ஆல்பினை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விசாரித்த போது தான், இந்த கொடூர செயலை செய்ததை ஒப்புக் கொண்டார். மேலும் அவர் போலீசில் சிக்க உதவியாக இருந்தது அவரது செல்போனும் கூட. செல்போனில் அவர் தேடிய எலி விஷம் தொடர்பான செய்தியை ஆதாரமாக வைத்து போலீசார் விசாரணை நடத்தியபோது தான் நடந்த அத்தனை கொடூரங்களும் தெரியவந்தது. பெற்றோர் தன்னை கண்டிப்பதால் அவர்களை கொன்று விட்டு தன் மனம் விரும்பிய போக்கில் வாழ திட்டமிட்டுள்ளார் ஆல்பின். இதற்காக தன் குடும்பத்திற்கு கொடூர மனதுடன் விஷத்தை கலந்து கொடுத்துள்ளார் அந்த இளைஞர். அதிலும் தங்கை உயிரிழந்த போது எந்தவித சலனமும் காட்டாமல் இறுதி சடங்கையும் முன் வந்து செய்துள்ளார் அவர். தன் உடன் பிறந்த சகோதரியை கொடூரமாக கொன்ற ஆல்பினை போலீசார் கைது செய்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் அவரது தந்தை மற்றும் தாய் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆல்பினின் தந்தைக்கு கேரளாவில் 4 ஏக்கர் நிலம், பன்றி மற்றும் கோழிப்பண்ணைகளும், ரப்பர் மரங்களும் உள்ள நிலையில் சொத்துக்காக தன் குடும்பத்தையே தீர்த்துக் கட்ட திட்டமிட்ட சம்பவம் மக்களை அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்