திருவனந்தபுரம் தங்க கடத்தல் விவகாரம் - விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது
தங்கக் கடத்தல் விவகாரம் தொடர்பாக பாதுகாவலர் ஜெயகோஷிடம் தேசிய புலனாய்வு அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
தலைமறைவாகியிருந்ததோடு கை நரம்பை அறுத்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட ஜெயகோஷ், திருவனந்தபுரத்தில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், என்ஐஏ அதிகாரிகள் நடத்திய விசாரணையில் பல புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த ஜூன் முதல் 22 முறை நடைபெற்ற கடத்தலின்போது விமான நிலையத்திற்கு வந்தடையும் தங்கம் அடங்கிய பார்சலை கைப்பற்றுவதற்கு சரித்துடன் ஜெயகோஷ் சென்றிருந்தது தெரிய வந்துள்ளது. ஆனால், கடந்த 30ம் தேதி 23 முறை நடைபெற்ற கடத்தலின்போது சரித் விமான நிலையத்திற்கு சென்றபோது ஜெயகோஷ் செல்லவில்லை என தெரிவித்துள்ளார். மேலும், நீண்ட காலமாக திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்திலும் தூதரக அலுலகத்திலும் பணியாற்றி வருவதால் அதன் பின்னணியில் மர்மங்கள் இருக்கக்கூடும் என்ற சந்தேகத்தில் என்ஐஏ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இதற்கிடையே தூதரக அலுவலகத்தில் கன்மேனாக இவரை நியமித்து டிஜிபி பிறப்பித்த உத்தரவு மற்றும் அப்பணியை நீட்டித்து பிறப்பித்த உத்தரவின் பின்னணி குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது. ஜெயகோஷ் காவல் துறையில் பல உயர் அதிகாரிகளிடம் நெருக்கமாக இருந்ததாகவும் விமானநிலையத்தில் வந்திறங்கும் காவல் துறை உயர் அதிகாரிகளுக்கு ஜெயகோஷ் பல உதவிகள் செய்துள்ளதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
Next Story