"ஊதுபத்தி கூட கொளுத்தக் கூடாது..." : தலைநகரில் உச்சபட்ச எச்சரிக்கை அறிவிப்பு

தீவிரமான நடவடிக்கை எடுத்துக் கொண்டிருந்தாலும், உச்சபச்ச எச்சரிக்கையை தாண்டிச் சென்று கொண்டிருக்கும், டில்லியின் காற்று மாசு குறித்து பார்க்கலாம்
ஊதுபத்தி கூட கொளுத்தக் கூடாது... : தலைநகரில் உச்சபட்ச எச்சரிக்கை அறிவிப்பு
x
மனிதர்கள் சுவாசிப்பதற்கு தேவையான சுத்தமான காற்று உள்ளதா என்பதை, ஏர் குவாலிட்டி இன்டெக்ஸ் அளவீடு மூலம் நிர்ணயிப்பது வழக்கம். இந்த அளவீடு, 50-க்குள் இருந்தால் நல்ல காற்று. 51ல் இருந்து -100 என்ற அளவில் இருந்தால் திருப்தி.101ல் இருந்து -200 என்றால் மிதமானது, 201ல் இருந்து -300 என்றால் மோசமானது. 301ல் இருந்து -400 என்றால் மிக மோசமானது, 401ல் இருந்து -500 மிக மிக மோசமானது என்று கணக்கிடப்பட்டுள்ளது.  

இந்த நிலையில், சமீபத்தில், தலைநகர் டெல்லியில் இந்த அளவீடு 401 என்ற அளவை எட்டியது. இந்த அளவுக்கு டெல்லியில் காற்று மாசுபட்டு தரம் குறைந்திருப்பது இதுவே முதல்முறை. மத்திய அரசின் காற்று தரக் கணிப்பு மற்றும் ஆராய்ச்சி அமைப்பான, 'சபார்' விடுத்துள்ள அறிக்கையில், "அறை ஜன்னல்களை மூடி விடுங்கள், அடிக்கடி வீட்டை ஈரத் துணியினால் துடைத்துக்கொள்ளுங்கள், விறகு கட்டை, மெழுகுவர்த்தி, ஊதுபத்தியைக் கூட கொளுத்துவதை நிறுத்தி விடுங்கள்" என எச்சரிக்கப்பட்டுள்ளது. 

மக்கள் வெளியே செல்கிற போது 'என்-95' முகமூடிகளை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். வருடத்தின், இறுதி மாதங்கள் வந்து விட்டாலே, டெல்லிக்கு கஷ்ட காலம்தான். காற்று மாசுபாட்டோடு பனியும் சேர்ந்து கொள்ளும் காலம் என்பதால், மூச்சு விடவே, பொது மக்கள் சிரமப்படுவார்கள்.  இந்த வருடம் நிலைமை இன்னும் மோசமாகி உள்ளது. 

தசரா பண்டிகையின் போது எரிக்கப்பட்ட பொருள்களால் வளிமண்டலத்தில் மாசு அதிகரித்தது. காற்று தர அளவீட்டின் மதிப்பு சராசரி 337 என்ற அளவில் இருந்தது. இது மிகவும் அபாயகரமான அளவீடாகும். முதன்முறையாக ஏற்பட்ட இந்த அளவீட்டையும் தாண்டிச் சென்று கொண்டிருக்கிறது காற்று மாசு. நவம்பர் மாதத்தில் இதனை விட மோசமான நிலையை, டெல்லி எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று எச்சரிக்கை செய்திருக்கிறது மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம். 

நவம்பர் மாதம் தொடங்கி, 15-ம் தேதி வரையிலான கால கட்டத்தில் கவனமாக இருக்க வேண்டும். அறுவடை முடிந்த பின்னர் மீதமிருக்கும் கழிவுகளை விவசாயிகள் எரிப்பது தொடர்ந்து  கொண்டிருக்கிறது. தீபாவளி பண்டிகையின் போது காற்றின் நிலை, அபாய கட்டத்தை நெருங்கும் வாய்ப்பு அதிகம். எனவே, 'சிக்கலான நாள்களை எதிர்கொள்வதற்குத் தயார் படுத்திக்கொள்வது அவசியம்' என்று மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், டில்லி மக்களை உச்சபட்சமாக எச்சரித்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்